200 ஏழைக் குடும்பங்களுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் உணவு சமைத்துப் போட்டு உதவி வருகிறார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த நெருக்கடியான நேரத்தில் பலர் தங்களால் முடிந்த உதவிகளைப் பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். திரை நட்சத்திரங்களும் அவர்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர். முகக்கவசங்களை வழங்குவது, உணவுப் பொருட்களை தருவது என தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே ஒரு பகுதியில் வசிக்கும் 200 ஏழைக் குடும்பங்களுக்கு உதவி உள்ளார். இவருடைய குடும்பம், ஏழைகளுக்கு உணவு தயாரித்து விநியோகித்துள்ளது. ஊரடங்கு எவ்வளவு காலம் நீட்டிக்கப்பட்டாலும் அதுவரை உதவ வேண்டும் என்றும் இவர் முடிவெடுத்துள்ளார்.
ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்கிய நடிகை நயன்தாரா..!
இது குறித்து ரகுல், ‘அவசரக்காலத்தின் போது சமூகத்திற்கு நாம் திருப்பித் தர வேண்டிய நேரம் இது’ என்று கூறியுள்ளார். ஒருவருக்கு கிடைத்துள்ள அனைத்து சலுகைகளுக்காக நன்றியைத் தெரிவிக்க சரியான தருணம் இது என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது ரகுல் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடிக்கிறார். ரகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘என்ஜிகே’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.