முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை மீது, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதிக்கவில்லை என பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்காமலிருந்தார் ஆளுநர். இதனால், முதல்வர் பரிந்துரைத்தும் மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி – பொன்முடி

அந்த மனுவில், “அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சி செய்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதைச் செயல்படுத்த மறுக்கிறார்” என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான ஏ.எம்.சிங்வி, “உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்து பிறகு, பொன்முடியை அமைச்சராக்க வேண்டி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். ஆனால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க மாட்டேன். அது, அரசியலமைப்புக்கு எதிரானது என்கிறார் ஆளுநர். மார்ச் 13-ம் தேதி கடிதம் அனுப்பினால், 17-ம் தேதி பதில் வருகிறது” என்று வாதம் செய்தார்.

பொன்முடி – உச்ச நீதிமன்றம்

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், “தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, பதவிப் பிரமாணம் செய்துவைக்க மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறாரா… அவரிடம் கூறுங்கள், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்போகிறோம். பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஆளுநர் எப்படிக் கூற முடியும். இந்த விவகாரத்தை நாங்கள் நாளை வரை ஆளுநரிடம் விடுகிறோம். நாளை வரை பொறுத்திருப்போம், அதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை என்றால், அரசியலமைப்பின்படி நடந்துகொள்ளும்படி ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிப்போம்’ என்று கூறினார்.

அதற்கு, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல், `ஆளுநர் கூறுவதை நான் நியாயப்படுத்தவில்லை, அதை அவர் செய்த விதத்தை தான் நான் கூறுகிறேன்’ என்றார்.

அதையடுத்து, தலைமை நீதிபதி சந்திரசூட், `அட்டார்னி ஜெனரல்… ஆளுநரின் நடத்தை குறித்து நாங்கள் தீவிரமாகக் கவலைப்படுகிறோம். அதை நீதிமன்றத்தில் நாங்கள் உரக்கச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தை மீறுகிறார்… அவருக்கு அறிவுரை கூறியவர்கள் யாரும் அவருக்கு சரியாக அறிவுரை கூறவில்லை.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றம் ஒரு தண்டனையை நிறுத்திவைப்பதாகக் கூறினால், தண்டனை நிறுத்திவைக்கப்படுவது தான் என்பதை ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு நபர் மீது எனக்கு வேறுபட்ட கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால், நாம் அரசியலமைப்பின்படியே செல்ல வேண்டும். இவரை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் கூறினால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் அதைச் செய்ய வேண்டும்” என்று கூறி, நாளை மீண்டும் விசாரிக்கப்படும் விசாரணையை ஒத்திவைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.