சென்னை அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஐ.பி.எல் 17 வது சீசன் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி பதவி விலகி ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பாகாவும் அத்தனை அணிகளின் கேப்டன்களும் பங்குபெறும் போட்டோஷூட் நிகழ்வு நடைபெறும். அந்தவகையில், இன்று நடந்த கேப்டன்களின் போட்டோஷூட்டில் சென்னை அணியின் சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் பங்கேற்றிருக்கிறார். அவரை சென்னை அணியின் புதிய கேப்டன் என ஐ.பி.எல் நிர்வாகமும் அறிவித்திருக்கிறது.
சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த சீசனிலேயே ஓய்வு பெறும் முடிவில் இருந்தார். ஆனால், ரசிகர்களின் அன்பினால் கூடுதலாக ஒரு சீசனில் ஆடுவதாக அறிவித்தார். ஆக, எல்லாருமே தோனி இந்த சீசனிலும் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி வெற்றி பெற வைப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், தோனியோ வேறு விதமாக சிந்தித்துள்ளார். இந்த சீசனோடு தோனி ஓய்வு பெறும்பட்சத்தில் அடுத்த சீசனிலிருந்து வேறொரு வீரர் கேப்டனாக வேண்டியிருக்கும். தோனி இல்லாமல் வேறொருவர் அணியை வழிநடத்துவது முழுமையாக சரியாக இருக்குமா என்று தெரியாது. அதனாலயே தோனி இருக்கையிலேயே அவரது மேற்பார்வையிலேயே இன்னொரு கேப்டனை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும்.
இரண்டு சீசன்களுக்கு முன்பாக இப்படித்தான் ஜடேஜாவை கேப்டனாக்கினார்கள். ஆனால், சீசனின் இடையிலேயே அவர் சரியாக செயல்படவில்லையென்பதால் தோனியே மீண்டும் கேப்டனாகினார். ஆக, இந்த முறை என்ன நடக்கப்போகிறது? ருத்துராஜ் கேப்டன் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த முடிவு குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!