தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயகக் கூட்டணி முடித்துள்ளது. பா.ஜ.க-வின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். 4 தொகுதிகளில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.

அண்ணாமலை

சுமுகமாக, திருப்தியாக இந்தத் தொகுதிப் பங்கீடு முடிந்திருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார். அவர் நல்ல முடிவெடுத்திருக்கிறார். அவரே மற்ற தகவல்களை தெரிவிப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளை நாங்கள் கேட்டிருந்தோம்.

இருப்பினும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தொண்டர்களின் பலத்தை நிரூபித்து காட்டுவதற்காக ஒரு தொகுதியில் மட்டும் நிற்பதாக முடிவெடுத்திருக்கிறோம். அதுவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவெடுத்திருக்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம்

அந்தத் தொகுதியில் தொண்டரை நிறுத்துவதைவிட நானே களத்தில் இறங்கி பலத்தை நிரூபிக்கவிருக்கிறேன். அவர்கள் அதிக தொகுதி தர விருப்பமாக இருந்தார்கள். ஆனால், இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். 39 தொகுதிகளில் எந்த தொகுதியில் என்றாலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.