மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் மார்ச் 16-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றிலிருந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இப்படியிருக்க, நாட்டின் 100-வது சுதந்திர தின ஆண்டில், அதாவது 2047-ல் இந்தியா வளர்ந்த நாடக இருக்கவேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தோடு, `விக்சித் பாரத்’ திட்டத்தைப் பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக, கடந்த சில நாள்களாகவே, பலரின் வாட்ஸ்அப் எண்களுக்கு `விக்சித் பாரத் சம்பார்க் (Viksit Bharat Sampark)’ என்ற வாட்ஸ்அப் கணக்கிலிருந்து PDF வடிவில் கடிதம் ஒன்று வந்துகொண்டிருக்கிறது.
அந்தக் கடிதத்தில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். உங்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவால், ஜி.எஸ்.டி, பிரிவு 370 ரத்து போன்ற பல வரலாற்று முடிவுகளை எங்களால் எடுக்க முடிந்தது.
தேசத்தின் நலனுக்காகத் துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சியத் திட்டங்களை வகுக்கவும், அவற்றைச் சீராகச் செயல்படுத்தவும் எனக்கு மகத்தான பலத்தைத் தருவது உங்கள் ஆதரவுதான். விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் ஆதரவை உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்” என்று மோடி தெரிவித்திருக்கிறார். இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருக்கும் சூழலில் வாட்ஸ்அப்பில் இவ்வாறான மெசேஜ்கள் வருவதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் பல புகார்கள் வந்திருக்கின்றன.
இந்த நிலையில், அத்தகைய புகாரின் மீதான நடவடிக்கையின் ஒருபகுதியாக வாட்ஸ்அப்பில் `விக்சித் பாரத்’ மெசேஜ்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறும், இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.