அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தடை விதிக்கக் கோரி, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓ.பி.எஸ் தாமதப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி, அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து, உத்தரவிட்டிருந்தார்.
இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில், `தடையை நீட்டிக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, அவற்றைப் பயன்படுத்த மாட்டேன்’ என ஓ.பி.எஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களைக் கேட்டறிந்தார்.
இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12-ம் தேதி நிறைவடைந்த நிலையில், இடைக்கால மனுக்கள்மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
இந்த மனுக்களில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, அ.தி.மு.க-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து, உத்தரவிட்டார்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி, அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான இடைக்கால கோரிக்கையைத்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
மேலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும்,
ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில்தான் கட்சியில் இருந்து சிலரை, தான் நீக்கியதாகவும், அதற்கு தனக்கு உரிமை உள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனக்குப் பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளதால் அவர்கள் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், தனக்கு எதிராக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காக கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புவதாகவும், அதற்கு தொண்டர்களை சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டுமெனவும் பன்னீர்செல்வம் சார்பில் வாதிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும்போது, மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறைதான் எனத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும், ஆனால் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைத்தான் எதிர்ப்பதாகவும் கூறினார். மேலும், வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக்கொள்ளட்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது.