மார்ச் 22-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்கியது.
இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி மட்டுமின்றி, தோனிக்குக் கடைசி சீசன் எனவும் சொல்லப்படுகிறது. விராட் கோலி சில மாதங்கள் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்கிறார். இருவரும் மோதிக்கொள்ளும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று (மார்ச் 18-ம் தேதி) காலை 9:30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 20 நிமிடங்கள் முன்பாகவே காலை 9:10 க்கு டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டது. இது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஓப்பன் ஆகியிருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களால் டிக்கெட்டை புக் செய்யவே முடியவில்லை.
கடந்த முறையைவிடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் அதிக தொகையைக் கொடுத்து எப்படியாவது போட்டியைப் பார்த்துவிடலாம் என ஆவலோடு இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஷ்வின், “நம்ப முடியாத அளவிற்கு டிக்கெட் டிமாண்ட் இருக்கிறது. என் குழந்தைகள் சேப்பாக்கத்தில் நடைபெறும் CSKvRCB போட்டியையும், ஐபிஎல் 2024 தொடக்கவிழாவையும் காண விரும்புகிறார்கள் எனக்கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கத்தை டேக் செய்து ப்ளீஸ் ஹெல்ப்” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.