தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார். சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் ரஞ்சித் பாலா பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், சாத்தான்குளம் அருகிலுள்ள வைரவம் தருவை குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதற்குள் ரஞ்சித் பாலா டைவ் அடிப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த ரீல்ஸ் எடுப்பதற்காக நண்பர்களுடன் சென்று ஒரு கட்டடத்தின் மீது ஏறி நிற்கிறார். அருகில் நிற்கும் நண்பர்கள் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு நகர்ந்து விடுவதும், பின்னர் தீ எரிந்த நிலையில் தண்ணீருக்குள் டைவ் அடிப்பதும் பதிவாகியுள்ளது. இதில் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனாலும், இந்த வீடியோ பார்ப்பவரின் மனதை பதைபதைக்கச் செய்கிறது. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு செம்மண் தேரிக்காட்டில் மண்ணிற்குள் தலையை புதைத்து தலைகீழாக நின்று சில நிமிடம் கழித்து வெளியே வரும் வீடியோவை பதிவிட்டிருந்தார். அவரது சமூக வலைதளப் பக்கங்களில் இது போன்ற சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். “இது போன்ற வீடியோக்கள் பகிரப்படுவதால் அதனைப் பார்த்து செய்து பல இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இது ஒரு தவறான முன்னுதாரணம். தவறான வழிகாட்டல். ரீல்ஸ், சாகசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்றாலும் ஆபத்தான இது போன்ற வீடியோக்கள் பகிரப்படக் கூடாது. இவர்களைப் போன்ற யூடியூபர்களை போலீஸார் எச்சரிக்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த நிலையில், ரஞ்சித் பாலாவின் வீடியோக்கள் தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலையம் மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.