ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் 6 கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 484 விசைப்படகுகளில் மீனவர்கள், மீன்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பர்ய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை நெடுந்தீவு கடல் பரப்பில் இருந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகுகளையும் அதில் இருந்த 21 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற ஆரோக்கிய சுகந்தன, அருள் டிப்சன், சாமுவேல், அந்தோணி, பூமிநாதன், ராஜ் உள்ளிட்ட 11 பேரையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த இஸ்ரேல் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற அந்தோணி லோபர்ஸ் அடிமை, குருஸ் திவாகர், அஜித்குமார் உள்ளிட்ட 9 பேரையும் இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக யாழ்ப்பாணம் மாவட்டம், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் அத்துமீறல் தொடர்வது, மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.