பீகார் மாநிலத்தில் திருமணத்தை வீடியோ எடுக்க அழைக்கப்பட்ட வீடியோகிராபர் ஒருவர் செய்த சம்பவம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, முசாபர்பூர் மாவட்டத்தின் சந்த்வாரா காட் தாமோதர்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இது குறித்து மணமகனின் தந்தை லக்ஷ்மண் ராய், போலீஸில் அளித்த புகாரின் மூலம் வீடியோகிராபரின் பெயர் கோலு குமார் என்றும், மணமகன் வீட்டாரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது. மேலும், மணமகனின் தந்தை லக்ஷ்மண் ராய் அளித்த புகாரின்படி, மார்ச் 4-ம் தேதி சந்தைக்குச் சென்ற இவரின் பெண் மீண்டும் திரும்பவேயில்லை.
அதைத் தொடர்ந்து, காணாமல்போன பெண்ணை குடும்பத்தினர் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, திருமணத்தை வீடியோ எடுக்க அழைக்கப்பட்டிருந்த வீடியோகிராபர் கோலு குமார், பெண்ணுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக, லக்ஷ்மண் ராயிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரின் மருமகன் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, வீடியோகிராபர் கோலு குமார் வீட்டுக்குச் சென்ற லக்ஷ்மண் ராய், அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி கோலு குமாரின் தந்தையிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும், இருவரும் கிராமத்துக்கு வந்ததாகவும், ஆனால் சீக்கிரமாகவே கிராமத்திலிருந்து கிளம்பிவிட்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்திருக்கின்றனர். பின்னர், காவல் நிலையத்துக்குச் சென்ற லக்ஷ்மண் ராய், திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கோலு குமார் தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகாரளித்தார். புகார் பெற்றதை உறுதிப்படுத்திய அஹியாபூர் காவல் நிலைய அதிகாரி ரோஹன் குமார், தொடர்ந்து விசாரணையும், அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் நடந்துவருவதாகத் தெரிவித்தார்.