மனிதத்தைத் தாண்டி மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிஜேபி அரசு, பெண்களின் உரிமைகளையும் சட்டம் போட்டு ஒடுக்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் மோடி அரசு வெளியிட்டுள்ள அரசாங்க அறிவிப்பில், பெண்கள் தங்களது பெயரை (surname) மாற்ற `விவாகரத்து ஆணையின் நகல்’ மற்றும் கணவரிடம் இருந்து ‘அனுமதிக் கடிதம்’ ஆகிய இரண்டு ஆவணங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் இந்த அறிவிப்பில் தேதி குறிப்பிடப்படவில்லை.
இதனைக் கடுமையாகச் சாடியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சாகேத் கோகலே, தனது இன்ஸ்டா பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ரூல்ஸ், `பெண் வெறுப்பின் வெட்கமற்ற காட்சி’…
இந்தப் புதிய விதிகளின்படி, கணவரைப் பிரிந்திருக்கும் பெண்கள் அல்லது தங்கள் கணவரின் குடும்ப பெயருக்குப் பதிலாக தங்களது குடும்ப பெயருக்கு மாற்ற நினைக்கும் பெண்கள் விவாகரத்து ஆணையின் நகல் அல்லது கணவரின் அனுமதி கடித்ததில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு பெண் தனது பெயரை மாற்றிக் கொள்வதற்கு கணவனின் அனுமதி எதற்கு?… ஒரு எம்பி என்ற முறையில், இந்தப் பெண் வெறுப்பாளர் ஆட்சி அகற்றப்படுவதையும் திரும்பப் பெறுவதையும் உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விதிகள் எந்த அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதை அறிய Controller of Publications-க்கு கடிதம் எழுதி உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் திவ்யா மோடி என்ற தனது பெயரை, திருமணத்திற்குப் பிறகு திவ்யா மோடி டோங்யா என மாற்றிக்கொண்டார். தற்போது, தனது பெயரை பழையபடி திவ்யா மோடி என மாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஆனால், அரசின் அறிவிப்பு, குடும்ப பெயரை மீண்டும் மாற்றுவதைத் தடுக்கிறது என்பதுதான் அவருடைய வாதம்.
கணவரிடமிருந்து `ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை (NOC)’ கட்டாயமாக்குவதன் மூலம், பெண்களின் சுதந்திரத்தைக் இந்தச் சட்டம் குறைக்கிறது என்றும் கூறியிருக்கிறார் திவ்யா மோடி. டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதிலைக் கேட்டுள்ளது.