மக்களவைத் தேர்தல் அறிவிக்கவிருந்த வேளையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அருண் கோயலின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுவிட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அதைத் தொடர்ந்து, அவரது ராஜினாமா குறித்து உடனடியாக அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.
திடீரென பதவியை அவர் ராஜினாமா செய்தது, அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். மேலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்திருப்பதால், தேர்தல் முறையாக நடக்குமா என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேர் கொண்ட ஆணையத்தில், ஓர் இடம் காலியாக இருக்கிறது. தேர்தல் ஆணையர் அனூப் சந்திரா பாண்டே பணி ஓய்வுபெற்றதால் ஏற்பட்ட காலியிடம் உடனடியாக நிரப்பப்படவில்லை. இந்த நிலையில், மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததால், தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரும், தேர்தல் ஆணையர் அருண் கோயலும் மேற்கு வங்கம் சென்றபோதுதான், இந்த விவகாரம் வெளியே வந்தது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக சென்ற இவர்கள், மார்ச் 5-ம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கவிருந்தனர்.
ஆனால், ராஜீவ் குமார் மட்டுமே செய்தியாளர்களைச் சந்தித்தார். ‘அருண் கோயலுக்கு உடல் நிலை சரியில்லாததால், அவர் டெல்லிக்கு கிளம்பிச்சென்றுவிட்டார்’ என்று காரணம் சொன்னார் ராஜீவ் குமார். அவர் சொன்னது உண்மையான காரணம் அல்ல. அவர்கள் இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அருண் கோயல் ராஜினாமாவுக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அருண் கோயல் ராஜினாமா செய்தது, தலைமைத் தேர்தல் ஆணையருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாகவா? அல்லது, மோடி அரசுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாகவா? அல்லது, தனிப்பட்ட காரணங்களுக்காகவா? அல்லது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் போல, பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதற்காகவா? என்று சரமாரியாக கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன. இந்த நிலையில், எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிந்துகொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு நடைமுறை தொடர்பாக தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க வேண்டுமென்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடந்த எட்டு மாதங்களாக நேரம் கேட்டுவருகின்றன. அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கவில்லை என்கிறார்கள். எல்லா கட்சிகளுக்கும் பொதுவான தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சியினரைச் சந்திக்க மறுப்பது ஏன்?
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘என்ன நெருக்கடியில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார்? அவர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறாரா? மக்களவைத் தேர்தல் நேர்மையுடன் நடைபெறுமா?’ என்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
ஏற்கெனவே, ’தேர்தல் ஆணையத்தை தலையாட்டி பொம்மை போல மாற்றுவதற்கான எல்லா வேலைகளையும் பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்துவருகிறது’ என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஒரு முறையை ஏற்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதன்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும் தேர்வுசெய்யும். ஆனால், அந்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக ஒரு மத்திய அமைச்சர் இருப்பார் என்று மாற்றிவிட்டனர்.
எனவே, தற்போது காலியாக இருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர் இடங்களுக்கு பிரதமர் மோடி விரும்புகிற நபர்களை நியமிக்க முடியும். சுயேச்சையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY