மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு `பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகா கவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதைத் தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை கௌரவிக்கும் வகையில், மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருதை’ வழங்கியிருக்கின்றன.
தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம்) கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘மகாகவிதை’ நூலைப் படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.
இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். விருதினைப் பெற்றுக் கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.