இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்திருக்கிறது.
5 போட்டிகளும் முடிவடைந்திருக்கும் நிலையில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடி இருந்தனர். குறிப்பாக சுப்மன் கில் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்திருந்தார்.
சிறப்பாக விளையாடி சதமடித்த போது மைதானத்தில் இருந்த அவருடைய அப்பா மிகுந்த பெருமையுடன் எழுந்து நின்று கைதட்டி கில்லைப் பாராட்டினார். இந்நிலையில், தனது அப்பா குறித்துப் பேசிய கில், “நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என் தந்தையுடைய கனவு. நான் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை முதல்முறையாக அவர் பார்க்கிறார். இங்கிலாந்திற்கு எதிராக நான் சதமடித்ததை பார்த்து அவர் நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆண்டர்சனை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பினேன். ஆண்டர்சன் வீசியதில் நான் ஆட்டமிழந்த அந்தப் பந்தை சரியாகப் பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்கும்” என்றார்.
சிக்ஸ் அடித்த பின் ஆண்டர்சனுடன் தொடர்ந்து பேசிகொண்டே இருந்தது என்ன என்பது குறித்த கேள்விக்கு, “அந்த உரையாடல் என்ன என்பது எங்கள் இருவருக்குள் மட்டுமே இருப்பதுதான் சரியென்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.