நாடு முழுவதும் நேற்று சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று காலையிலிருந்தே மும்பையில் உள்ள சிவன் கோயில்களில் பக்தர்களில் கூட்டம் அலைமோதியது.
மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் சிவன் கோயில் பல நூறு ஆண்டுகள் பழைமையானது ஆகும். இக்கோயிலைப் பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் கட்டியதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தது.
இது தவிர தென்மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கி.மீ கணக்கில் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். மாட்டுங்காவில் உள்ள சங்கர மடத்தில் நேற்று காலையிலிருந்தே மகாசிவராத்திரியையொட்டிப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
அதோடு நேற்று காலையிலிருந்து இன்று அதிகாலை ஐந்து மணி வரை தொடர்ச்சியாக பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. நேற்று இரவு சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சண்முகானந்தா சங்கீத சபாவின் தலைவர் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். டோம்பிவலி பிம்ப்லேஷ்வர் கோயில் உட்பட நகர் முழுவதும் இருக்கும் சிவன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி காணப்பட்டன.
சிவனுக்கு பக்தர்கள் வில்வ இலை மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். நேற்று முதல் இன்று காலைவரை பக்தர்கள் உறங்காமல் இருந்து சிவநாமத்தை உச்சரித்த வண்ணம் இருந்தனர்.