துபாயிலிருக்கும் ஃபைசல் கான் என்பவர் மும்பையைச் சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் நல்ல வெளிவாங்கித் தருவதாக தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களை ஏமாற்றிக் கூட்டிச் சென்றதாகவும், அங்கு அவர்கள் ராணுவத்தில் கட்டாயப்பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
அதோடு, அவர்களை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதமும் எழுதியிருந்தார். அதையடுத்து, ரஷ்யாவில் சிக்கியிருக்கும் 20 இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை பதிலளித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவில் சிக்கிக்கொண்ட இந்தியர்களில் ஒருவரான ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்ஃபான் (30) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைதராபாத் நபரின் உயிரிழப்பை உறுதிசெய்த ரஷ்யாவிலிருக்கும் இந்தியத் தூதரகம், “இந்தியாவைச் சேர்ந்த முகமது அஸ்ஃபானின் துயர மரணம் குறித்து நாங்கள் அறிந்தோம். உயிரிழந்தவரின் குடும்பத்தினருடனும், ரஷ்ய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அதோடு, அவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று X சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
ஆனால், முகமது அஸ்ஃபானின் உயிரிழப்புக்கான காரணத்தை இந்தியத் தூதரகம் கூறவில்லை. இருப்பினும், ரஷ்ய படையில் முகமது அஸ்ஃபான் கட்டாயப்பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், உக்ரைனுடனான போரில் எல்லையில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, Indian Tech & Infra என்ற X சமூக வலைதள பக்கம், “ரஷ்யா அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற இளைஞர், உக்ரைனுடன் சண்டையிட எல்லைக்கு அனுப்பப்பட்டு போர்முனையில் உயிரிழந்தார். வெளிநாட்டில் நடக்கும் வேலை மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று ட்வீட் செய்திருக்கிறது.
இதேபோல, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிவந்த குஜராத் இளைஞர் ஹேமில் அஸ்வின்பாய் மங்குகியா என்பவர், கடந்த மாத இறுதியில் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த தங்களை ஏஜென்ட் ஒருவர் ஏமாற்றி ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும், தற்போது உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் இந்திய அரசிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY