கோவிட் தொற்று சமயத்தில் பலரும் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவே விழி பிதுங்கிய சமயத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் 217 கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளார்.
இந்தச் செய்தியைக் கேட்ட ஆராய்ச்சியாளர்கள் ஹைபர்வாக்சினேஷன் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அது எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றுகிறது என்பது குறித்து அறிய விரும்பினர். ஜெர்மனியில் உள்ள ஃபிரெட்ரிக் அலெக்சாண்டர் பல்கலைக்கழகம் எர்லாங்கன் நுர்ன்பெர்க் (FAU), முனிச் மற்றும் வியன்னாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினர்.
அந்த நபரும் எர்லாங்கனில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான சோதனைகளில் விருப்பத்துடன் பங்கேற்றார். இந்த ஆராய்ச்சிக்கு மருத்துவர் கிலியன் ஸ்கோபர் தலைமை தாங்கினார்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “பொதுவாகவே தடுப்பூசிகளில் நோய் கிருமியின் பாகங்கள் இருக்கும். அந்தத் தடுப்பூசி ஒருவருக்குச் செலுத்தப்படும் போது அந்த நபரின் செல்கள் நோய் கிருமியின் கூறுகளை தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்ளும்.
பின்னர் உண்மையாகவே அந்த நபர் தொற்றுக்குள்ளாகும் போது நோயெதிர்ப்பு அமைப்பு உண்மையான நோய்க்கிருமியை அடையாளம் காணக் கற்றுக்கொள்கிறது. அதற்கு எதிராகவும் வேகமாகவும் செயல்படுகிறது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனை நோயெதிர்ப்பு அமைப்பு அடிக்கடி எதிர்கொண்டால் என்ன நடக்கும்… ஹெச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸ் பி போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றில் இது வழக்கமாக இருக்கலாம்.
தொடர்ச்சியாக ஆன்டிஜென்கள் செலுத்தப்படுவதால் T-செல்கள் எனப்படும் சில வகை நோயெதிர்ப்பு செல்கள் சோர்வடைகின்றன. இவை குறைவான அளவில் ப்ரோ இன்ஃபளமேட்டரி மெசென்ஜர்களை (pro-inflammatory messenger substances) வெளியிடும்.
ஆன்டிஜென்களுடன் இவை பழகுவதால் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தலாம். நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமியை அவ்வளவு திறம்பட எதிர்த்துப் போராட முடியாது.
அதுவே அதிகமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் ரத்தப் பரிசோதனையின் முடிவுகளை ஆராய்கையில், SARS-CoV-2க்கு எதிராக அவர் அதிக எண்ணிக்கையிலான டி-எஃபெக்டர் செல்களைக் கொண்டிருக்கிறார். இந்த செல்கள் வைரஸை எதிர்த்துப் போராடும் வீரர்களாக இருக்கின்றன.
மூன்று தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட நபர்களோடு ஒப்பிடுகையில், இந்த நபர் அதிகளவில் இந்த செல்களை கொண்டிருந்தார். அவற்றின் செயல்திறனில் எந்தச் சோர்வையும் ஆராய்ச்சியாளர்களால் உணர இயலவில்லை. சாதாரண எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இருந்ததைப் போலவே அவையும் பயனுள்ளவையாக இருந்தன’’ என்று கூறியுள்ளனர்.
217 தடுப்பூசிகளைப் பெற்ற பின்னரும் தடுப்பூசிகள் ஆன்டிபாடிகளை உருவாக்கி பாதுகாப்பை அதிகரிக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர்.