பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யபட்ட 11 குற்றவாளிகள் சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.
குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா துணைச் சிறையில் ஜனவரி 21 அன்று இவர்கள் சரணடைந்தனர். ஆனால், இது எதுவும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க குஜராத் உயர் நீதிமன்றமும் வரிசையாக பரோல் வழங்குகிறது.
குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் சந்தனா என்பவர் மார்ச் 5 அன்று நடக்கவிருக்கும் தன் சகோதரன் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக 10 நாள்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பரோலில் வெளிவருவது இது முதல் முறையல்ல. சரணடைந்த 16 நாள்களிலேயே தன் மாமனார் இறந்துவிட்டார் என்று மற்றொரு குற்றவாளி, பிப்ரவரி 5 அன்று 5 நாள்கள் பரோலில் வெளிவந்தார்.
பில்கிஸ் பானு வழக்கில் மீண்டும் சிறைக்குள் சென்றவர்கள் சப்பை கட்டுக் கட்டி பரோலில் வெளிவருவது பலரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில்,
“கல்யாணம்
கருமாதி
பிறந்த நாள்னு ஊர்ல இருக்க
கன்விக்ட் செய்யப்பட்ட
ரேபிஸ்ட்டுக்கு Parole ஓ parole தான்,
இது தான் இந்திய ரேப் கல்ச்சர்.’’ எனத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரின் பதிவு பலரின் வரவேற்பை பெற்றதோடு, வைரலாகி வருகிறது.
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு இணக்கம் காட்டுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!