உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள், 2021-ம் ஆண்டு டெல்லியில் நடத்திய மாபெரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு.

ஆனால், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், சீல் வைக்கப்பட்ட ஹரியானா மற்றும் டெல்லி எல்லைகளில் நேற்று முதல் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சம்பு எல்லைப் பகுதியில் காவல்துறைக்கும், விவசாயிகளுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள்மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால், அம்பாலாவுக்கு அருகிலுள்ள சம்பு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை எதிர்கொள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தண்ணீர் பாட்டில்கள், ஈரத் துணிகள், கண்ணீர்ப் புகையின் தாக்கத்தைக் குறைக்கப் பாதுகாப்பு உபகரணங்களுடன் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர். மேலும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளைச் சுமந்து பறக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்ய, நூலில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது குறித்துப் பேசும் விவசாயிகள், “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஏதோ தீவிரவாதிகளை எதிர்கொள்வதைப்போல் அரசு இயந்திரம் நடத்துகிறது. டிரோன் மூலம் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, எங்களைக் கலைக்கப் பார்க்கின்றனர். அதை எதிர்கொள்ளவே இப்படி பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறோம்” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.