அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி?
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கரூரில் உள்ள அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதோடு செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் குறித்து விசாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான், தற்போது இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நிதிஷ் குமாருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், தோல்வியில் முடிந்தது!
முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக, பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்மீது இன்று, பீகார் சட்டமன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் NDA கூட்டணிக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். அதனால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தொடர்கிறார்.
இமாச்சலின் சட்லஜ் ஆற்றில், சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு!
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தின் சட்லஜ் ஆற்றில், 6 நாள்களுக்கு பிறகு, மீட்கப்பட்டிருக்கிறது. ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
தொடங்கியது சட்டசபைக் கூட்டம்… அரசு தயாரித்த உரையைப் புறக்கணித்தார் ஆளுநர்!
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் சற்று முன்பு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சபையின் தொடக்கத்திலும், முடிவிலும் தேசியகீதம் பாடப்பட வேண்டும். ஆனால், இங்கு தேசியகீதம் பாடப்படவில்லை. அதேபோல, மாநில அரசு தயாரித்த உரை, நடைமுறைக்கு முரணாக இருக்கிறது” எனக் கூறி, அரசு தயாரித்த உரையைப் படிக்காமல் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து தற்போது சபாநாயகர் அப்பாவு உரையாற்றி வருகிறார்.
ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்; ஆளுநர் உரையுடன் இன்று நடைபெறுகிறது!
தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம், வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்கும். இது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 2-வது வாரத்தில் கூடுவதாக இருந்த சட்டசபை, முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகத் தள்ளிப்போனது. இந்த நிலையில், `ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து, 19-ம் தேதி சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்’ என சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார்.
அதன்படி, இன்றைய தினம் சட்டசபைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். சுமார் 30 நிமிடங்கள் அவர் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. வழக்கம்போல, ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி பொது பட்ஜட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் (20-ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. அதையடுத்து பட்ஜெட்மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தின் நிறைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றவிருக்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடக்கும்.