தற்போது சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் (Fastag) வாயிலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச் சாவடிகளில் நெரிசலை குறைத்து வேகத்தை அதிகப்படுத்துவதற்காக ஃபாஸ்டேக் பரிவர்த்தனை முறை கொண்டுவரப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களில் இருமடங்கு சுங்கக் கட்டணமும், அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
ஃபாஸ்டேக் வசூல் முறை வருவதற்கு முன், 2018-19 ஆண்டில் சுங்கச் சாவடிகளில் வாகனக்கள் காத்திருக்கும் சராசரி நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. ஃபாஸ்டேக் வந்தபின் சராசரி காத்திருப்பு நேரம் 47 நொடிகளாக குறைந்துவிட்டது. இந்த நிலையில், ஃபாஸ்டேக் முறைக்கும் மேலாக ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வாயிலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக ஜி.பி.எஸ் சுங்கக் கட்டணம் வசூல் முறை அமல்படுத்தப்படும் எனவும், இதனால் வாகன நெரிசல் மேலும் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஜி.பி.எஸ் டோல் வசூல் முறை எப்படி செயல்படும்?
ஜி.பி.எஸ் அடிப்படையிலான டோல் வசூல் முறை, வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஆட்டோமேட்டிக்காக கேமரா மூலம் கண்காணிக்கும் திறன் கொண்டவை. இந்த கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு வாகனம் எந்தெந்த பகுதிகளில் நுழைகிறது, வெளியேறுகிறது என்பதை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கான டோல் கட்டணம் என்னவென்பதையும் தானாகவே மதிப்பிட்டுவிடும்.
சரியான டோல் கட்டணம் வாகன ஓட்டியின் கணக்கில் இருந்து நேரடியாக வசூலித்துக்கொள்ளப்படும். இதனால், குறுகிய தூரங்களுக்கு பயணிப்பவர்கள் பயனடைவார்கள். ஏனெனில், சுங்கச் சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையான டோல் கட்டணங்களுக்கு இந்த ஜி.பி.எஸ் முறையில் வேலை இல்லை. வாகனம் பயணித்த தூரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுமட்டுமல்லாமல், சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்துக்காக பணம் கொடுத்துவிட்டு காத்திருப்பது, ஃபாஸ்டேக் பேலன்ஸ் என்னவென சரிபார்ப்பது போன்ற செயல்முறைகளும் காலாவதியாகப்போகின்றன.