அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள கேன்சஸ் நகரில் வசிப்பவர் மரியா தாமஸ் (26). இவருக்கு ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைக் கையில் வைத்துத் தாலாட்டித் தூங்க வைத்திருக்கிறார். குழந்தை தூங்கிய பிறகு, தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாகத் தொட்டில் என நினைத்து அருகிலிருந்த மைக்ரோவேவ் ஓவனில் வைத்துவிட்டு, வெளியே சென்றுள்ளார் மரியா. பின்னர் வீட்டில் ஏதோ கருகிய நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து மரியாவின் மாமனார் வீட்டில் ஏதோ கருகிய நாற்றம் வருவதாகக் கூறி, மரியாவை அழைத்திருக்கிறார்.
வீட்டிற்குள் வந்த மரியா குழந்தை மைக்ரோவேவ் ஓவனில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் குழந்தையை வெளியே எடுத்திருக்கிறார். ஆனால் குழந்தை அசைவு ஏதுமின்றி இருந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “மரியா, தொட்டில் என நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்திருக்கிறார். குழந்தை அணிந்திருந்த டைய்ப்பர், குழந்தையைப் படுக்கவைத்திருந்த போர்வை போன்றவை ஓவன் வெப்பத்தால் எரிந்திருக்கின்றன. அதனால் பலத்த தீக்காயங்கள் ஏற்படவே, குழந்தை தீக்காயங்களைத் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறது.
குழந்தை இறப்பிற்குக் காரணமான மரியாமீது `குழந்தை நலனுக்கு ஆபத்து விளைவித்தல்’ மற்றும் `குழந்தை இறப்பிற்குக் காரணமானவர்’ போன்றவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிந்து, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்… வேண்டுமென்றே குழந்தையை ஓவனில் வைத்தாரா அல்லது தவறுதலாகத்தான் குழந்தையை ஓவனில் வைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறும்.
மிசௌரி மாகாணத்தின் சட்ட வழக்குபடி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பிற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை விதிக்கும்” என்று தெரிவித்தார்.
தாயின் கவனக்குறைவால் குழந்தை உடல் கருகிப் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.