நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகிலுள்ள அத்திச்சால் கிராமத்தின் சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதாக, உள்ளூர் மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், ஆய்வு செய்துள்ளனர். சிறுத்தையின் இறப்பை உறுதிசெய்து வனத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்களுடன் குழுவாகச் சென்ற வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையின் உடலை மீட்டு சேரம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்து, ஆய்வுக்காக உடல் பாகங்களைச் சேகரித்துள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவில் சிறுத்தையின் உடலில் காயங்கள் இல்லாத நிலையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தை இறப்பு குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், “தற்போது இந்த சிறுத்தை இறந்துகிடந்த அத்திச்சால் பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதே பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறந்திருக்கிறது.
இறந்த சிறுத்தையின் முகத்தில் சிறிய காயம் மட்டுமே இருக்கிறது. ஆனால், அந்தக் காயம் உயிர் இழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இல்லை. விஷம் தடவப்பட்ட இறைச்சியை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே பகுதியில் 4 சிறுத்தைகள் மர்மமான முறையில் இறக்கும் சம்பவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.