சமூக வலைதளத்தில் சந்தித்து நட்பாகப் பழகிய ஒருவர், போதைப்பொருள் கொடுத்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, மும்பையைச் சேர்ந்த 21 வயது பெண் அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மகிழ்ச்சியாகக் கடந்திருக்க வேண்டிய இரவு, மிகவும் மோசமானதாக மாறியது” எனப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சம்பவத்தன்று மாலை நேரத்தில் ஹீதிக் ஷா என்ற நபரை அந்தப் பெண் சந்தித்துள்ளார். பின் உணவகத்திற்குச் சென்று அவருடன் மது அருந்தியுள்ளார். அதன் பிறகு மிகுந்த போதையுடனும் ஒருவித பதற்றத்துடனும் இருந்தாக, அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
“என்னை அதிகமாகக் குடிக்க அவர் வற்புறுத்தினார். மேலும் நான் தற்காலமாகச் சுயநினைவினை இழக்கத் தொடங்கினேன். அடுத்து என்ன நடந்தது என்பதை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. மது அருந்திய பிறகு என்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
பின் சுயநினைவுக்கு வந்து அந்தப் பெண் அவரை எதிர்க்க முயன்றபோதிலும், ஹீதிக் ஷா உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபட்டதாகவும்… மூன்று முறை கன்னத்தில் அறைந்து பயமுறுத்தி மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் ஹீதிக் ஷாவின் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்தாக பதிவிட்ட அவர், மறுநாள் காலையில் ஹீதிக் ஷா தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்டதாகவும், அந்த மன்னிப்பு தனக்குத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “அவர் எனக்கு என்ன செய்தார் என்பது அவருக்குத் தெரியும் என்பதால்தான், அவர் தலைமறைவாகி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமலிருந்திருக்கிறார். பின்னர் அவரது குடும்பத்தினர் உண்மையை அறிந்து, அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர் ஹீதிக் ஷாவுக்கு எதிராக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இருப்பினும், புகாரளித்து 12 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அந்த நபர் கைதுசெய்யப்படவில்லை எனவும் அந்தப் பெண் குற்றம்சாட்டுகிறார்.
போலீஸ் தரப்பிலோ, “இளம்பெண் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.