மத்திய அமெரிக்காவில் இருக்கும் பகுதி நிகரகுவா. இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் `நிகரகுவாக்கள்’ என அழைக்கப்படுகின்றனர். 2008-ம் ஆண்டு நிகரகுவாவிலிருந்து குவாத்தமாலாவிற்குள் பயணிகள் பேருந்து ஒன்று நுழைந்தது. அதில் நிகரகுவாக்கள் பயணித்தனர். அந்தப் பேருந்தில் வருபவர்கள் போதைப்பொருள் கடத்தி வருவதாக, போதைப்பொருள் கடத்தல் மன்னன் மார்வின் மான்டியேல் மரின் சந்தேகித்தார். அதற்காக, அந்தப் பேருந்தை நிறுத்தி அவர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா எனச் சோதித்தார்.
அவர்களிடம் அப்படி எதுவும் இல்லை என்றதும், ஏமாற்றத்தின் ஆத்திரத்தில், அந்தப் பேருந்தில் பயணித்த 16 நிகரகுவாக்களையும், ஒரு டச்சுக் குடிமகனையும் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார். மேலும், அவர்களின் உடல்களை தனக்குச் சொந்தமான தோட்டத்தில் எரித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து, அந்த நபரைத் தேடிவந்தது. அப்போது தப்பித்தவர், 2022-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில்தான், போதைப் பொருள் கடத்தல் மன்னன் மார்வின் மான்டியேல் மரினுக்கு, அவர் செய்த ஒவ்வொரு கொலைக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, மொத்தம் 17 கொலைகளைச் செய்ததற்காக மார்வின் மான்டியேல் மரினுக்கு 850 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, இந்த வழக்கில் மார்வின் மான்டியேல் மரினின் மனைவி சாரா குரூஸ் உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.