பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்று புதியதொரு சாதனை படைத்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றது குறித்து ஒருபக்கம் சமூகவலைதள பக்கங்களில் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் பிக் பாஸ் போட்டியாளரான சரவண விக்ரம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சரவண விக்ரம். பிக் பாஸ் வீட்டினுள் அவரும் ஒரு போட்டியாளராகச் சென்றார். ‘நிச்சயம் டைட்டில் பட்டத்தை வெல்வேன்’ என நினைத்தவர் பைனலுக்கு முன் எவிக்ட் ஆனார்.
வீட்டினுள் அவரைச் சந்திக்கச் சென்ற போது அவரது தங்கை மாயா – பூர்ணிமாவுடனான நட்பு குறித்துப் பேசியிருப்பார். பின்னர் அந்த வீட்டிலிருந்து வெளியேறும் வரைக்கும் குழப்பத்திலேயே இருந்தார் சரவண விக்ரம். பின்னர் பைனலில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது மாயாவிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் தன் நட்பைப் புதுப்பித்தார். இது ஒருபுறம் இருக்க, அவரைக் குறிக்கும் வகையில் “குடும்பத்தினரை விட வேறொருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம்” என்பது போலப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு வைரலானது.
இந்நிலையில் சரவண விக்ரம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘I Quit My Passion’ என்கிற புகைப்படத்தை ‘எல்லாருக்கும் நன்றி!’ என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார். இதனால் அவர் தன் கனவான நடிப்பை விட்டுவிட்டார் என்பதாக ஒரு சாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்றாலும் இது குறித்து அவரே விளக்கம் அளித்தால்தான் உண்மை தெரியவரும். அவரின் இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.