இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்ஸாவும் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் சோயப் மாலிக்கும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.
காதலித்து, 2010-ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இஷான் மிஸ்ரா மாலிக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்கள் வெளியிடும் பதிவுகள், `ஒருவேளை விவாகரத்தாக இருக்குமோ’ என நினைக்கவைக்கும் வகையிலேயே உள்ளது.
`சானியா மிர்சா என்ற சூப்பர்வுமனின் கணவர்’ என்ற தனது இன்ஸ்டாகிராம் பயோவை, 2023-ல் மாற்றி இருந்தார் மாலிக். மற்றொருபுறம் சானியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, சோயிப் மாலிக்குடன் எடுத்த பெரும்பாலான படங்களை நீக்கினார்.
இந்நிலையில், `உங்கள் இதயத்தின் அமைதியை ஏதாவது தொந்தரவு செய்தால், அதைப் போக விடுங்கள்’ என ஜனவரி 8 அன்று பதிவிட்டு இருந்தார் சானியா மிர்சா.
தற்போது மீண்டும் இந்த சர்ச்சைக்குத் தீனி போடும் விதமாக சானியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டோரியில், “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
உடல் பருமன் கடினமானது. ஃபிட்டாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். கடனாளியாக இருப்பது கடினமானது. நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
பிறருடன் தொடர்பு கொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
வாழ்க்கை எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நாம் கடினமானதைத் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு, விவாகரத்திற்கான முன்கூட்டிய அறிவிப்பா என நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.