மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்களை அளித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களின் போராட்டத்தால் மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலிலும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணின் கூட்டாளியான சஞ்சய் சிங்கே வெற்றி பெற்றார். இதனால் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் வெண்கலம் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, மத்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதைத் திருப்பி அளித்துவிட்டார்.
இந்நிலையில் ‘யார் வற்புறுத்தினாலும் பத்ம ஸ்ரீ விருதை நான் திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “நீதி கிடைக்கும் வரை ‘பத்ம ஸ்ரீ விருதை நான் திரும்பப் போவதில்லை. எங்களது சகோதரிகளின் கெளரவத்தைக் காட்டிலும் எந்த ஒரு விருதும் பெரிது கிடையாது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைத்தப் பிறகுதான் விருது பெற்றுக்கொள்வதைப் பற்றிச் சிந்திப்பேன்” என்று கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாகக் குரல் எழவதாலும், வேறு பல காரணங்களாலும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இப்போது மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.