மத்திய அரசு ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கெளரவிக்கும் வண்ணம் ‘சாகித்ய அகாடமி’ விருதினை வழங்கி வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே கடந்த வாரம் இதுதொடர்பான செய்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகி இலக்கிய வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பேசிய பலரும், அறிவிப்பு வெளியாகும் முன்னேதாக இப்படி செய்திகள் வெளியாவது சரியானதல்ல எனக் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படி செய்திகள் பரவினால் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படாமலே போவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது சாகித்ய அகாடமி விருது தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவிபாரதி அருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவுசெய்த ‘பலி’, ‘பிறகொரு இரவு’ போன்ற சிறுகதைகள் மற்றும் ”நொய்யல்’ நாவல் மூலம் அறியப்பட்டவர்.
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த இவரின் இயற்பெயர் ராஜசேகரன். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் முழு நேர எழுத்தாளராக மாறி கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் ‘நீர்வழிப் படூஉம்’. இந்நாவல், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைப் பற்றி பேசும் நாவலாகும். எளிய மனிதர்களின் வாழ்வியலையும், வாழ்வின் எதார்த்தையும் அதன் தன்மை மாறாமல் பிரதிபலிப்பதில் கைதேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி. அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய வட்டராத்தைச் சேர்ந்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.