“தென் மாவட்டத்தில் மழை வெள்ளமாக இருக்கும்போது, தி.மு.க அமைச்சர்கள் மாநாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்…” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியிருக்கிறார்.

திருநெல்வேலி மழை பாதிப்பு 2023

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மக்களுக்கு மதுரை மாநகர அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருள்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, “மழை, வெள்ள பாதிப்புகளுக்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

மழை வெள்ளப் பணிகளில் ஒரே ஓர் அமைச்சர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். தென் மாவட்டத்தில் மழை வெள்ளமாக இருக்கும்போது, மற்ற அமைச்சர்கள் தி.மு.க மாநாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல, மழை வெள்ளத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

செல்லூர் ராஜூ

சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகள் போதுமானதல்ல. கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் மழை வெள்ளமாக இருக்கக்கூடிய நேரத்தில், தி.மு.க மாநாடு நடத்த வேண்டுமா… தி.மு.க மாநாடு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள்… தி.மு.க அரசு நிர்வாக திறனற்ற அரசாக, விளம்பர அரசாகச் செயல்படுகிறது.

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க என்ன செய்தது… எதிர்க்கட்சியாக இருந்தாலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருள்களை அளித்து வருகிறோம்.

திருநெல்வேலி மழை வெள்ளம்

2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்களுக்கு நிறைய நிவாரணப் பணிகள் செய்ததால்தான், 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மக்களுக்காக நிறைய திட்டங்களைச் செய்திருந்தால், தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியுமா?” எனக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.