இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளான அக்காவும் நானும் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். அவர்தான் தனி ஆளாக எங்களை வளர்த்து, கல்லூரி வரை படிக்க வைத்தார்.
அக்காவும் நானும் ஈருடல் ஓருயிராக வளர்ந்தோம். `எச்சூழலிலும் நாம் பிரிந்துவிடக் கூடாது’ என்று அவ்வப்போது சொல்லிக்கொள்வோம். கல்லூரிப் பருவம் முடிந்த சமயத்தில் அக்காவுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாட்டி. மாமாவின் வேலை விஷயமாக வெளிமாநிலத்துக்கு அவர்கள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
அதுவரை, எனக்கு அக்கா, அக்காவுக்கு நான், எங்களுக்கு பாட்டி என்றிருந்த எங்கள் உலகத்தில் திடீரென அருவியாக மகிழ்ச்சி பாய்ந்தது அவள் குழந்தைகளால். சொல்லப்போனால், என்னையும் அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகவே உணர்ந்தேன். அவர்களை விட்டுப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை என நான் கெஞ்சியதால், அக்காவும் மாமாவும் எனக்காக, மீண்டும் எங்கள் ஊருக்கே வேலை மாற்றிக்கொண்டு வந்தனர் குழந்தைகளுடன்.
இதற்கிடையில் நான் ஒருவரை காதலித்தேன். பாட்டி, அக்கா, மாமா சம்மதம் கூறினர். என் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனால், ஒரு சம்பவம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அன்று குழந்தைகளை என்னிடம் விட்டுவிட்டு பைக்கில் வெளியில் சென்ற அக்காவும் மாமாவும் விபத்தில் உயிரிழந்தனர். குழந்தைகளுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. எனக்காக அழுவதா, குழந்தைகளுக்காக அழுவதா என்று அறியாமல் என் வாழ்க்கை சூன்யமாகியுள்ளது.
’எனக்குத் திருமணமெல்லாம் வேண்டாம், அக்கா குழந்தைகளை நானே வளர்க்கப்போகிறேன்’ என்று என் காதலரிடம் சொல்லிவிட்டேன். ஏனெனில், நானும் என் அக்காவும் யாரும் இல்லாமல் வளர்ந்த வலியை நான் அறிவேன். என் அக்காவின் குழந்தைகளுக்கும் அந்நிலை ஏற்படக் கூடாது. என் காதலரோ, ‘நாம கல்யாணம் பண்ணிக்கிட்டும் நீ குழந்தைகளை பார்த்துக்கலாம், என்ன இப்போ?’ என்கிறார். ‘சரி அதை உன் அப்பா, அம்மாவையும் சொல்லச் சொல்லு. கல்யாணத்துக்கு அப்புறம் நான் குழந்தையோடுதான் வருவேன்’ என்றேன். என்னிடம் வந்து பேசிய அவர் அம்மா, ‘இதெல்லாம் எங்க பையனுக்குச் சரிப்படாது. குழந்தைகளுக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணிட்டு வா. இல்லைன்னா. எங்க பையனை விட்டுடு’ என்றார்.
அதையே நானும் என் காதலரிடம் சொல்லிவிட்டேன். ‘என்னால் குழந்தைகளை விட்டுவிட்டு வர முடியாது, நீ வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்’ என. அவனோ, ‘எங்க அப்பா, அம்மா பேச்சை மீறி என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஆனால், உன்னை விட்டுட்டுப் போகவும் முடியாது. நான் காத்திருக்கேன். இந்தப் பிரச்னை எப்போ, எப்படி முடியுமோ அதுவரை காத்திப்பேன்’ என்கிறான்.
குழந்தைகளின் துயர் ஒரு பக்கம் என்றால், அவனை நினைத்தாலும், எங்கள் காதலை நினைத்தாலும் துன்பத்தை தாங்க முடியவில்லைதான். தவிக்கும் நான் என்ன முடிவெடுப்பது?