இரண்டரை மாதங்களைக் கடந்து கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நோக்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7.

விஜய் டிவியின் எவர்கிரீன் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 7, கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கியது. கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, மாயா, பூர்ணிமா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, சின்னத்திரை நடிகை ரவீனா, நடிகை விசித்ரா, நிக்சன் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாகப் போவதாக நினைத்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் நான்கு வாரங்கள் கழித்து அதிரடியாக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஒரே நேரத்தில் தினேஷ், அர்ச்சனா, பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா என மே;லும் ஐந்து போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார்கள். இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களில் தற்போது தினேஷ், அர்ச்சனா இருவர் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர, மீதி மீன்று பேர் ஏற்கெனவே எவிக்ட் ஆகிவிட்டனர்.

அனன்யா

தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய விஜய் வர்மா, அனன்யா ராவ் இருவரையும் சில தினங்களுக்கு முன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினார்கள். இவர்களில் அனன்யா இரு தினங்களுக்கு முன் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரத்துக்கான வழக்கமான வார இறுதி எவிக்‌ஷனின் ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது.

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எவிக்‌ஷன் நடைபெறாததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனன்யா ஏற்கெனவே மிட் வீக் எவிக்‌ஷன் மூலம் வெளியேறி விட்டதாலோ என்னவோ, இந்த வார எவிக்‌ஷனில் பிக் பாஸ் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் கூல் சுரேஷ் மட்டும் வெளியேறியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூல் சுரேஷைப் பொறுத்தவரை இந்த சீசனில் கலந்துகொண்ட யாரும் எதிர்பாராத போட்டியாளர் எனச் சொல்லலாம். ஏனெனில் கடைசி நேரத்தில்தான் இவர் நிகழ்ச்சிக்குள் செல்வது உறுதியானது. படங்களின் ரிலீஸ் நேரங்களில் தியேட்டர் வாசல்களில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு புரொமோஷன் செய்கிறேன் என்ற பெயரில் அலப்பறைகள் செய்து வந்த கூல் சுரேஷ், பிக் பாஸ் செல்வதற்குச் சில தினங்களுக்கு முன் பெண் தொகுப்பாளர் ஒருவருக்கு சினிமா ஆடியோ லாஞ்சில் மாலை அணிவித்து அது சர்ச்சையானது நினைவிருக்கலாம்.

அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட அவர், தான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகவும் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்டார். நடிகர் சிம்பு சிபாரிசு செய்பவர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் இவரும் சிம்புவின் சிபாரிசால்தான் வந்தார் எனச் சொன்னார்கள் சிலர்.

கூல் சுரேஷ்

நிகழ்ச்சிக்குள் இவர் சிறப்பாகவே விளையாடினார் எனச் சொல்லலாம். ஆரம்ப எபிசோடுகளில் பிரதீப்புக்கும் இவருக்குமிடையில் எழுந்த மோதல் வைரலானது நினைவிருக்கலாம். ஆனாலும் சில தினங்களுக்கு முன் வீட்டு ஞாபகம் வந்து விட்டதாகச் சொல்லி பிக் பாஸ் வீட்டிலிருந்து தன்னை வெளியில் அனுப்பிவிடுமாறு கோரிக்கை வைத்ததுடன் அந்த வீட்டிலிருந்து சுவர் ஏறித் தப்பிக்க முயன்றிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அவர் இன்று எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். கூல் சுரேஷ் வெளியேறிய எபிசோடு நாளை (17/12/23) ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.