சென்னை கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள எல்.பி.ஜி பங்க் அருகே கட்டுமான பணி நடந்து வந்தது. மிக்ஜாம் புயல், மழையின்போது கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டது. இதில் பங்க் ஊழியர்கள் மூன்று பேரும் கட்டுமான பணியிலிருந்த ஊழியர்கள், கட்டுமான பணிக்கான தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அதோடு ஜே.சி.பி இயந்திரம், கட்டுமான பொருள்களும் அந்தப்பளத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு பணி ஊழியர்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தாலும் பள்ளத்தில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் இரண்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
அவர்களை மீட்கும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பள்ளத்துக்குள் வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்த சங்கர், கட்டுமான ஊழியர் ஜெயசீலன், பங்க் ஊழியர் நரேஷ் ஆகியோர் சிக்கியதால் அவர்களின் குடும்பத்தினர் அந்தப்பகுதியிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தனர். நரேஷ் மற்றும் ஜெயசீலனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. முதலில் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு கட்டட இடிபாடுகளும் அகற்றப்பட்டன. சேறும் சகதியுமாக இருந்த பள்ளத்தில் இருவரையும் மீட்பு குழுவினர் தேடிவந்தனர். விபத்து நடந்த 5-வது நாளில், அதாவது, கடந்த 8-ம் தேதி நரேஷ் என்பவர் முதலில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு ஜெயசீலனின் சடலமும் மீட்கப்பட்டது. ஜெயசீலன் சடலம் மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். தன்னுடைய கணவரான ஜெயசீலனின் சடலத்தைப் பார்க்க அவரின் மனைவி முயன்றார். அப்போது, `என் அம்மு எனக்கு வேணும்’ என சத்தமாக கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்களும் அங்கு இருந்தவர்களும் தவித்தனர். ஜெயசீலனின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனால் ஜெயசீலனின் மனைவியை உறவினர்கள் காரில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, `என் தங்கம் போல இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என ஜெயசீலனின் மனைவி அழுதப்படியே காரில் ஏறி சென்றார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீஸார், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரைத் தேடிவந்தனர். இதில் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். வேறு யாராவது பள்ளத்துக்குள் சிக்கியிருக்கிறார்களா என மீட்பு குழுவினர் தேடிவருகிறார்கள். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.