மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

சென்னை வெள்ளம்

சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5060 கோடி நிதி வழங்கும்படி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அது தொடர்பான கோரிக்கை மனுவை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வழங்கினார் ஸ்டாலின்.

அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்புப் படை, வானிலை ஆராய்ச்சி மையம், துணை ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் வெள்ள பாதிப்புகளைத் தணிப்பதற்கான பணிகளில் சிறப்பாக ஈடுபட்டிருக்கின்றன. வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழு ஒன்று இங்கு வரவிருக்கிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நிதியுதவியை மத்திய அரசு விரைவில் வழங்கும்’ என்றார்.

ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘மிக்­ஜாம் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு, சீரமைப்பு பணி­க­ளுக்காக ரூ.5,060 கோடியை இடைக்­கால நிவாரணமாக வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். முதல்வரின் கடிதத்தை பிர­த­மர் மோடியி­டம் தி.மு.க நாடாளு­மன்ற மக்களவைக் குழுத் தலை­வரான டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், ‘வரலாறு காணாத பெருமழை­ காரணமாக, சென்னை, திருவள்­ளூர், காஞ்சிபுரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளில் மிக அதிக மழை­பெய்து, மிகக் ­க­டு­மை­யான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. சாலை­கள், பாலங்­கள், பொதுகட்­டடங்­கள் என பல்­வேறு உட்­கட்­ட­மைப்புகள் சேத­ம­டைந்­த­தால் சென்னை உள்­பட நான்கு மாவட்­டங்­க­ளில் சுமார் ஒரு கோடி மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டி.ஆர்.பாலு

புயல் சேதத்தை நேரில் பார்­வையிட மத்திய அரசின் அதிகாரிகள் குழுவை உட­ன­டியாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்­தி­னார்.

இடைக்­கால நிவா­ரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5,060 கோடி நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்ட நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை மட்டும் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு குறைவான நிதி தரப்படுவதை தமிழ்நாடு பெரும் ஏமாற்றமாகப் பார்க்கிறது. இது முதன்முறை அல்ல. எப்போதெல்லாம், இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தேவையைக் காட்டிலும் மிகக்குறைவான நிதியையே மத்திய அரசு அளித்துவந்திருக்கிறது.

பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரி நீர் கிடைக்காததாலும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, நிலைமையை விரிவாக விளக்கி மத்திய அரசுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் மிகவும் குறைவான மழையாக 35 சதவிகிதம் முதல் 81 சதவிகிதம் பற்றாக்குறையாகப் பெய்தது. காவிரி நீர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்புப்படி, கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை.

அதன் காரணமாக, ஒருபோகம்கூட நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. விவசாய கூலிகளின் வாழ்வாதாரத்துக்காக, அவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்துக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

மோடி

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வறட்சி நிலையை மதிப்பீடு செய்ய மத்தியக் குழு வந்து ஆய்வு மேற்கொண்டது. ரூ.39,565 கோடியை ஒதுக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில், வெறும் ரூ. 6,450 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. இது யானைப் பசிக்கு சோளப் பொரியை போடுவது போல இருக்கிறது என்று தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்தனர். இத்தனைக்கும் மத்திய அரசுக்கு மிகவும் இணக்கமாக அதிமுக அரசு செயல்பட்ட காலம் அது. ஆனாலும் போதுமான நிதி கிடைக்கவில்லை.

சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை மக்கள் இழந்தனர். அப்போது, மத்திய அரசிடம் ரூ.25,912 கோடி நிவாரணம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.1,940 கோடியையே வழங்கியது. வர்தா புயலினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டபோது, ரூ.22,573 கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் கேட்டார்.

கொரோனா நிவாரணம்

புயலின் பாதிப்புகளை மத்திய குழுவினர் இரு முறை வந்து ஆய்வு செய்தனர். ஆனால், நிவாரணத் தொகையைத் தரவில்லை. கொரோனா பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், மிகக்குறைந்த நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. ஆனால், குறைவான நிதியை மத்திய அரசு வழங்கியது ஏன்? தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.510 கோடி போதாது’ என்று காட்டமாகக் கூறியது.

மத்திய அரசுக்கு மிக அதிக வரி வருவாயை தருகிற தமிழ்நாட்டுக்கு, மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் போது மிக குறைந்த அளவிலான தொகையை தருவதையே வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் இருப்பவர்கள், பின் தங்கிய மாநிலங்களுக்கு முன்னுரிமை என்று சொல்கிறார்கள். இதனை ஓரளவுக்கு ஏற்கலாம், தான், ஆனாலும், பெரும் பாதிப்புகளை சந்திக்கும் போது, அல்லது பேரிடர் காலங்களில் தேவையான நிதியை ஒதுக்குவது, மிக மிக அவசியமாகிறது.

இதனால்தான், தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.