எனக்குப் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம். திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வீட்டில் ஓர் ஆதிக்கவாதியாகவும், ஆணாதிக்கவாதியாகவும், ஆனால் வெளியில் தன்னை மனைவிக்கு அடங்கிப்போகும் கணவராகவும் காட்டிக்கொள்ளும் என் கணவரின் குணம்தான் என் பிரச்னை.
நான் இயல்பிலேயே மிகவும் தைரியமான பெண். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்காமல் என் மனதில் படுவதை பேசிவிடும் ‘பட் படார்’ டைப். திருமணத்தின்போது, ‘மாப்பிள்ளை வாய் பேசாதவர், நீ வாயாடி. ஜாடிக்கேத்த மூடிதான். வீட்டுல உன் ராஜ்ஜியமாதான் இருக்கப் போகுது’ என்றெல்லாம் எங்கள் இரு வீட்டிலுமே கேலி செய்தார்கள்.
ஆனால் திருமணத்துக்குப் பின்னர், என் கணவர் அமைதியாக இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் தன் முடிவே இறுதி முடிவு என்று பிடிவாதமும், ஆதிக்கமும் கொண்ட கேரக்டர் என்பது எனக்குப் புரிந்தது. ஒரு கணவராக, குடும்பத் தலைவராக அவர் எப்போதும் எனக்கு இடுவது கட்டளைகள் மட்டுமே. டூர் போவது முதல் வீட்டில் பொருள்கள் வாங்குவது வரை எல்லாமே அவருடைய முடிவாகவும், தேர்வாகவும்தான் இருக்கும். ஆனால், எங்கள் இருவரது வீட்டிலும், ஏதோ இவையெல்லாம் என் இஷ்டப்படி நடப்பதாகவும், அவரை வீட்டில் நான் டாமினேட் செய்வதாகவுமே நம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்… வாயாடி என்று நான் வாங்கி வைத்திருக்கும் பெயர்.
நான் வாய் பேசுவேன்தான். ஆனால் வேஷம் போடமாட்டேன். என் கணவர் தான் அமைதியானவர் என்று வேஷம் போட்டுக்கொண்டு, என்னை அடங்காத பொண்டாட்டி போலவும், தன்னை பொண்டாட்டிதாசன் போலவும் நடித்துக்கொண்டிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என் வீட்டிலும் அவர் வீட்டிலும், ‘நம்புங்க… எங்க வீட்டுல கத்துறதுதான் நான், காரியம் எல்லாம் அவர் இஷ்டப்படிதான் நடக்குது’ என்றால், ‘உன்னைப் பத்திதான் எல்லாருக்குமே தெரியுமே, அவரு பாவம்…’ என்கிறார்கள்.
‘சரி இதெல்லாம் ஒரு பிரச்னையா…’ என்பவர்களுக்கு, இந்தப் பிரச்னையின் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டும். அவர் வீட்டில் அவர் பெற்றோர், உடன் பிறந்தவர்களுடன் பிரச்னை ஏற்படும்போது, அவர்களுடன் பேச்சை தவிர்ப்பதிலிருந்து, பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பது வரை கடுமையாக நடந்துகொள்வார். ஆனால் அவை அனைத்தையும் நான் சொல்லித்தான் செய்வதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார். விளைவு… அவர்களிடம் என்னை வில்லி ஆக்குவிடுகிறார்.
என் புகுந்த வீட்டினரும், ‘அவன் பாவம் என்ன பண்ணுவான்… அவன் பொண்டாட்டிதான் அவனை அப்படியெல்லாம் சொல்ல வைக்கிறா’ என்கிறார்கள். ‘இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… எல்லாம் உங்க பையனோட முடிவுதான்’ என்று நானே நேரடியாக அவர்களிடம் சொன்னாலும் அவர்கள் நம்புவதில்லை. இப்போது புரிகிறதா என் பிரச்னை?
எப்படிக் களைவது என் கணவரின் வேடத்தை?