பால் தட்டுப்பாடு…உணவு தட்டுப்பாடு…என சென்னை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களை மிக்ஜாம் புயல் படாய்படுத்தியது. இன்னும் அந்த பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவே இல்லை. ‘பால் கூட கடைகள்ல கிடைக்கல’ என்று மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் வேளையில், “ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அமைச்சர் மனோ தங்கராஜின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுகிறது.
இதுக்குறித்து பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமியிடம் பேசியபோது, “மொத்த பால் விநியோகஸ்தர்களிடமிருந்து முகவர்களுக்கு நடு இரவு 12.30-3 மணிக்குள், முகவர்களிடமிருந்து கடைகளுக்கு காலை 5-7 மணிக்குள் என ஆவின் பால் சரியான நேரத்திற்கு சரியான இடத்திற்கு சென்று சேர்ந்தாலே கள்ளசந்தைக்கு வாய்ப்பு இருக்காது.
மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் 50 சதவிகித பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவது, அம்பத்தூர் பால் பண்ணையில் மழைநீர் புகுந்தது போன்ற காரணங்களால் ஆவின் பால் பேக்கிங் முதல் சப்ளை வரை சரியான நேரத்திற்கு நடக்கவில்லை… கிடைக்கவில்லை. இதனால் சென்னையில் பால் பண்ணையிலிருந்து மொத்த விநியோகஸ்தர்களுக்கு பால் கிடைப்பதற்கே காலை 10 மணி ஆகிவிடுகிறது. இதற்கு மேல் பால் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதை பயன்படுத்தி மொத்த பால் விநியோகஸ்தர்கள் பண்ணையிலிருந்து பாலை எடுத்துவந்து, சென்னையின் பல பகுதிகளில் அவர்களாகவே காய்கறிகளை கூறுபோட்டு விற்பதுப்போல பாலை மக்களுக்கு அதிக விலையில் விற்று வருகிறார்கள். மேலும் குறைந்த விலை நீல நிற பால் பாக்கெட்டுகளை மாற்றி அதிக விலை ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை லாரியில் ஏற்றி வருவதும் நடக்கிறது.
உதாரணமாக, நீல நிற பால் பாக்கெட் மட்டும் ஏற்றி வரும் 10,000 லிட்டர் லாரியில், நீல நிறம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை 6,000 லிட்டர், 4,000 லிட்டர் என மாற்றி ஏற்றி வந்து விற்கிறார்கள். இது அதிகாரிகள்-மொத்த பால் விநியோகஸ்தர்கள் கூட்டு மூலம் நடக்கிறது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
பொதுவாக பால் பண்ணையிலிருந்து பால் ஏற்றி வரப்படும் லாரி வெளியில் வரும்போது எடை சரிபார்க்கப்படும். ஏதாவது புகார் எழுந்தால் மட்டுமே லாரியின் உள்ளுக்குள்ளும் சோதனை செய்யப்படும். இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு சரியான நேரத்தில் பால் சென்று சேர வேண்டும் என்ற காரணத்தால் எடை மட்டுமே தற்போது சரிபார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆக, லாரியின் உள் சோதனை செய்யப்படாதது, பேக்கிங் முதல் சப்ளை வரையான கால தாமதம், நிர்வாக சீர்கேடு போன்றவை ஆவின் பால் கள்ளசந்தைக்கு முக்கிய காரணங்களாகும்” என்று கூறினார்.