நான் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர். எனக்குப் பல்லாயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அழகாக ஆடை உடுத்தி, ஆடி, பாடி என நான் போடும் வீடியோக்கள் எல்லாம் நன்றாக வியூவ்ஸ் போகும். அதை முன்னிறுத்தியே, இப்போது பிராண்ட் புரமோஷன், சின்னச் சின்ன ஈவன்ட்களுக்கு அழைக்கப்படுவது என வருமானமும் பார்த்து வருகிறேன்.
ஒன்றரை வருடங்களுக்கு முன், என் நண்பரின் நண்பராக அறிமுகமானார் என் காதல் கணவர். ‘உங்க ரீல்ஸுக்கு நான் ஃபேன்’ என்று ஆரம்பித்த பழக்கம், நட்பாகி, ஒரு நாள், ‘நான் உங்களை விரும்புகிறேன், திருமணம் செய்துகொள்ளலாம்’ என்றார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. இருவரது வீடுகளிலும் பெரிய எதிர்ப்பில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டோம்.
திருமணத்துக்கு முன்பு வரை, திருமணத்தின் போது எல்லாம், நான் சோஷிய மீடியா இன்ஃப்ளூயன்சராக இருப்பது பற்றியோ, ஃபோட்டோஸ், வீடியோஸ் போடுவது பற்றியோ அவர் ஒரு வார்த்தை கூட குறையாகக் கூறியதில்லை. சொல்லப்போனால், எங்கள் திருமண போஸ்ட்டில் ‘அடப்பாவி… லட்டு மாதிரி பொண்ணை தூக்கிட்டுப் போயிட்டியேடா’ என்ற ரீதியில் வந்த ஆயிரக்கணக்கான கமென்ட்களை நாங்கள் இருவரும் சிரித்தபடியேதான் படித்தோம். அப்போதெல்லாம், பல ஆண்களும் விரும்பிய ஒரு பெண்ணை தான் திருமணம் முடித்துவிட்ட ஒரு சந்தோஷ சாகசமே அவரிடம் இருந்தது.
ஆனால், நாள்கள் ஆக ஆக… அவர் இயல்பு அப்படியே தொடரவில்லை. என் போஸ்ட்களுக்கு வழக்கமாக வரும் ஃபாலோயர்ஸின் கமென்ட்களை எல்லாம் படித்து, சிலரை திட்டி, சிலரை பிளாக் செய்யச் சொல்லி என்று மாற ஆரம்பித்தார். ’ஆனால்… திருமணத்துக்கு முன்னரும் இதுபோன்ற அழகை ஆராதிக்கும் கமென்ட்கள் முதல், கேவலமாக பேசும் கமென்ட்கள் எல்லாம் பார்த்து வருகிறோம் தானே? அவற்றை எல்லாம் நாம் பொதுவாக கண்டுகொள்வதில்லைதானே? இப்போது ஏன் ரியாக்ட் செய்ய வேண்டும்? எப்போதும்போல் நாம் நம் வேலையைப் பார்க்கலாம்’ என்றால், ‘அப்போது நீ என் லவ்வர், இப்போது நீ என் மனைவி’ என்கிறார்.
திருமணத்துக்கு முன்னர் ஷார்ட் டிரெஸ், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், இன்ஸ்டா போஸ்ட்கள் என எந்தக் காரணங்களுக்காக எல்லாம் என்னைப் பிடித்ததாகச் சொன்னாரோ, இப்போது அவற்றுக்கு எல்லாம் தடை சொல்கிறார். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்வார்கள். எனக்கு அப்படி இன்ஃப்ளூயன்சர் என்பது ஒரு வேலை. வருமானம் தரும் வேலை. திருமணத்துக்கு முன்னர், ’கல்யாணத்துக்கு அப்புறம் இதையெல்லாம் விட்டுடணும்’ என்று அவர் கேட்கவும் இல்லை; கேட்டிருந்தாலும் நான் கல்யாணத்துக்கே சம்மதித்திருக்க மாட்டேன்.
அப்போது எல்லாம் முற்போக்கு போல பெண் ஆடை பெண் உரிமை, பெண்கள் விரும்புவதை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு, இப்போது ’பொசசிவ்னெஸ்’ என்று சொல்லி, நான் போஸ்ட் போட, கமென்ட்டில் என் ஃபாலோயர்களுக்கு ரிப்ளை செய்ய என எல்லாவற்றுக்கும் பிரச்னை செய்கிறார் கணவர்.
பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன?