கேரள மாநிலம், கொச்சியில் வசித்துவந்த வட மாநில தொழிலாளி ஒருவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்காவது பெண் குழந்தை பிறந்து நான்கு மாதமே ஆகிறது. நான்கு குழந்தைகளையும் அவர்களின் தாய் கவனித்து வந்தார். அந்தத் தாய்க்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்துவந்துள்ளது.  இந்த நிலையில் நேற்று அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தை சிறையிலும், தாய் மருத்துவமனையிலும் உள்ளதால் நான்கு குழந்தைகளும் கவனிப்பார் இன்றி தவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கொச்சி சிட்டி மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் ஆனி சிவா தலைமையில் மகளிர் போலீஸார் அங்கு சென்று நான்கு குழந்தைகளையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது நான்கு மாதமே ஆன கடைசி குழந்தை பசியால் அழுதது. அங்கிருந்த போலீஸார் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தனர். அப்போது, அங்கிருந்த சிவில் போலீஸ் ஆஃபீஸர் எம்.ஏ.ஆர்யா அந்த குழந்தைக்குப் பாலூட்டினார். இது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

குழந்தைக்கு பாலூட்டும் போலீஸ் ஆர்யா

எம்.ஏ.ஆர்யாவுக்கு பிறந்து 9 மாதம் ஆன குழந்தை உள்ளது. பேறுகால விடுப்பு முடிந்து மூன்று மாதம் முன்புதான் பணியில் இணைந்தார். இந்த நிலையில்தான் பசியால் அழுத குழந்தையைப் பார்த்ததும் தன் குழந்தையைப்போன்று பாவித்து பாலூட்டியுள்ளார். அந்தக் குழந்தையும் ஆர்யாவின் அரவணைப்பில் பசியாறி கண்ணயர்ந்தது. பின்னர் அந்த நான்கு குழந்தைகளையும் போலீஸார் சிசு பவனில் சேர்த்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.