கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்புதலைத் திரும்பப் பெற, கர்நாடக அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது.
முன்னதாக, கடந்த பா.ஜ.க ஆட்சியில் டி.கே.சிவக்குமாருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக டி.கே.சிவக்குமார் சொத்து சேர்த்ததாக, அவர்மீது விசாரணை நடத்த தாமாக முன்வந்த அமலாக்கத்துறை, அப்போதைய பா.ஜ.க அரசிடம் அதற்காக அனுமதி கோரியது. பா.ஜ.க அரசும் அனுமதியளிக்க, சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடர்ந்தது.
இப்படியிருக்க, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும், மாநில துணை முதல்வராகப் பதவியேற்றார் டி.கே.சிவக்குமார். அடுத்த சில மாதங்களில், தன்மீதான சி.பி.ஐ விசாரணையை ரத்துசெய்யுமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், டி.கே.சிவக்குமாரின் மனுவை கடந்த அக்டோபரில் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், “சி.பி.ஐ தனது விசாரணையைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டது. எனவே இதில் நாங்கள் தலையிட முடியாது” என்று கூறி, அடுத்த மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், டி.கே.சிவக்குமார் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேற்று விளக்கிய மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், “அப்போதிருந்த பா.ஜ.க அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக சபாநாயகரிடம் முறையாக அனுமதி பெறாமல் விதிகளை மீறியிருக்கிறது. அதனால், முந்தைய அட்வகேட் ஜெனரல் மற்றும் தற்போதைய அட்வகேட் ஜெனரலின் கருத்துகளைக் கேட்ட பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “இன்று காலை செய்தித்தாள்களைப் படிக்கும் வரை இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. தெலங்கானா தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அடுத்த இரண்டு நாள்களுக்கும் தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில்தான் இருப்பேன்” என்றார்.
இருப்பினும் காங்கிரஸ் அமைச்சரவையின் இத்தகைய முடிவைச் சாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ அஸ்வத் நாராயண், “இது மிகவும் தீவிரமான வழக்கு. நீதிமன்றத்திலும் இது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வழக்கை சி.பி.ஐ-யிடமிருந்து பறிக்க அவர்கள் (காங்கிரஸ்) திட்டமிட்டிருக்கின்றனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கறைபடியாதவர்கள்போல் நடந்துகொள்ளும் இவர்கள், எதற்காக இந்த விசாரணையை எதிர்க்கிறார்கள்… கறைபடியாதவர்களாக இருந்தால், சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.