ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் அதீகான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (25). இவருக்கு பசந்தி பத்ரா (23) என்ற பெண்ணுடன் 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு டெபாஸ்மிதா என்ற இரண்டு வயது மகள் இருந்தாள். இந்த நிலையில், கடந்த மாதம் 7-ம் தேதி, பசந்தி பத்ராவும், அவரின் 2 வயது மகள் டெபாஸ்மிதாவும் இறந்துகிடந்தனர். அப்போது அவர்கள் தூங்கிய அறையிலிருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அறைக்குள் பாம்பு புகுந்து, தன்னுடைய மனைவியையும், மகளையும் கொன்றுவிட்டதாக கணேஷ் பத்ரா அழுது புலம்பினார்.

காவல்துறை

ஆனால், பசந்தி பத்ராவின் தந்தை `இது தற்செயலாக ஏற்பட்ட மரணமல்ல…’ எனக் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை கணேஷ் பத்ராவை விசாரித்தது. ஆரம்பம் முதல், தன் மனைவி, மகளைப் பறிகொடுத்துவிட்டதாகக் கூறி நடித்தவர், இறுதியில் திட்டமிட்டுக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “கணேஷ் பத்ரா மீது அவரின் மாமனார் புகார் அளித்தார். சுமார் ஒருமாதம் கழித்து வந்த புகார் என்பதால், தீவிரமாக ஆராய வேண்டியிருந்தது. கணேஷ் பத்ராவை விசாரித்ததில், ஆரம்பத்தில் மறுத்தார், ஆனால் இறுதியில் ஒப்புக்கொண்டார்.

அவரது கிராமத்திலிருந்து சுமார் 60 கி.மீ தூரமுள்ள கபிசூர்யா நகரில் ஒரு பாம்பைப் பிடித்திருக்கிறார். அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார். மனைவியும் மகளும் தூங்கும் அறையில் அந்தப் பாம்பை விட்டுவிட்டு, இவர் மற்றொரு அறையில் படுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே பாம்பு இருவரையும் கடித்திருக்கிறது. எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.