Doctor Vikatan: கடந்த இரண்டு தினங்களுக்கு முன் என்னுடைய இரண்டு வயது ஆண் குழந்தை மாலை தூங்கி எழுந்ததும் ஒரே அழுகை. சமாதானப்படுத்த முடியாமல் தவித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் கழிந்த பிறகே அழுகை நின்றது. இதே நிலை அடுத்த நாளும் தொடரவே அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர், ‘ஆண் குறியில் சிறுநீர் வரும் கழிக்கும் இடத்தில் இருக்கும் துவாரம் சிறியதாக இருக்கும் அல்லது அடைப்பு இருக்கலாம்’ என்று கூறி சில மருந்துகளைக் கொடுத்தார். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் குழந்தையின் ஆண்குறியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்கிறார். அவர் சொல்வது உண்மையா… அறுவை சிகிச்சை இல்லாமல் இந்தப் பிரச்னையை குணப்படுத்த முடியாதா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்
குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவது அல்லது சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்னைகள் சிறுநீர்ப்பாதையிலோ, சிறுநீர்ப்பையிலோ அல்லது சிறுநீரகங்களிலோ கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
எனவே நீங்கள் குழந்தைக்கு சிறுநீர்ப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அந்தப் பரிசோதனைகளின் மூலம் கிருமித் தொற்று உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எந்த இடத்தில் தொற்று உள்ளது என்றும், எந்த வகையான கிருமித்தொற்று என்றும் தெரிய வரும்.
அந்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து, பிரச்னைக்கு எந்த ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்து பரிந்துரைப்பார்.
ஆண்குறியின் முன்தோல் (foreskin) துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (Phimosis) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும்.
இந்தப் பிரச்னையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (Circumcision) எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலோ, அடைப்பு (Tight Phimosis) அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.