உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது. உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதில் இந்திய ரசிகர்கள் மொத்தமாக உடைந்து போயிருக்கின்றனர்.

Team India – Rahul Dravid and Rohit Sharma

இந்நிலையில், இந்த இறுதிப்போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பேசியிருந்தார்.

அவர் பேசியவை, ‘இது ஒரு கடினமாக நாளாகவே இருந்தது. இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறோம். எங்கள் அணியினரின் செயல்பாட்டை எண்ணி பெருமைக் கொள்கிறேன். இறுதிக்கட்டத்தில் மட்டும்தான் எங்களால் வெற்றிக்கானதை செய்ய முடியவில்லை. ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடிவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்கள் இந்தத் தொடரில் தயக்கத்துடனும் பயத்துடனும் ஆடினோம் என சொல்வதை ஏற்கமாட்டோம். இந்தப் போட்டியையே எடுத்துக்கொள்ளுங்கள் இதில் முதல் 10 ஓவர்களில் நாங்கள் 80 ரன்களை எடுத்திருந்தோம். ஆனால், விக்கெட்டுகள் விழுந்தது. விக்கெட்டுகள் விழும்போது கொஞ்சம் நின்று ஆட வேண்டும். அதைத்தான் எங்கள் வீரர்கள் செய்தார்கள். ஆனால், பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அட்டாக் செய்ய நினைக்கும் போது மீண்டும் விக்கெட் விழுந்தது. அதனால் மீண்டும் அந்த ப்ராசஸை தொடங்க வேண்டியிருந்தது. இதுதான் பிரச்சனை. இதனால் எங்களால் பவுண்டரிக்களை அடிக்க முடியவில்லை.

Team India

ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்ய முடிந்தது. ரசிகர்களுக்கு எங்களின் இன்றைய ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம். ஆனால், இந்த தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை விருந்தாக்கியிருக்கிறோம். நாங்கள் 11 நகரங்களுக்கு பயணித்து போட்டிகளில் ஆடியிருக்கிறோம். எல்லா மைதானங்களிலும் ரசிகர்கள் எங்களுக்காக திரளாக வந்திருந்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

ரசிகர்கள் இல்லாமல் என்ன கிரிக்கெட்டை நம்மால் ஆடிவிட முடியும். இப்படியொரு பேரார்வமிக்க ரசிகர்களுக்கு மத்தியில் ஆடியதில் எங்களுக்குதான் பெருமை. ரோஹித் மட்டுமல்ல அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர்களின் உணர்ச்சிகளை பார்க்க வேதனையாக இருக்கிறது.

அவர்கள் இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியும். அப்படியிருக்கையில் அவர்கள் உடைந்து நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், இதுதான் விளையாட்டு. இதில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். அன்றைய நாளில் சிறப்பாக ஆடும் அணியே வெல்ல முடியும். நாளை எந்த மாற்றமும் இல்லாமல் சூரியன் உதிக்கத்தான் போகிறது. நாங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம். அதை வருங்காலத்தில் அப்ளை செய்வோம். சில சமயங்களில் விளையாட்டில் ஒரு உச்சபட்சத்தை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால்,

எப்போதுமே நம்முடைய பயணத்தை நிறுத்திவிடக்கூடாது. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியில்லாமல் தேங்கி நின்றால் எதையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. எந்த உச்சங்களையும் எந்த வீழ்ச்சியையும் நம்மால் சந்திக்க முடியாது.

நான் பயிற்சியாளராக தொடர்வேனா இப்போது இருக்கும் வீரர்கள் 2027 உலகக்கோப்பையில் ஆடுவார்களா என நிறைய கேள்விகளை கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் என்னால் இப்போது பதில் சொல்லவே முடியாது. ஒரு பெரிய போட்டியை இப்போதுதான் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். எங்களின் எண்ணம் முழுவதும் இந்தப் போட்டியையும் இந்தத் தொடரையும் மையப்படுத்தியாக மட்டுமே இருந்தது. நாங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவே இல்லை. அதனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி, இப்போது இந்த போட்டி இந்த மூன்று முக்கிய தோல்விகளிலுமே நானும் இருந்திருக்கிறேன்.

குறிப்பிட்ட அந்த நாட்களுக்காக வீரர்கள் மனதளவில் மிகச்சிறப்பாக தயாராகியிருந்தார்கள். ஆனால், அந்த நாளில் எங்களால் எதிரணியை விட சிறப்பான செயல்பாடுகளை கொடுக்க முடியவில்லை. அதுதான் பிரச்சனை!’ என்றார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.