2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்தத் தொடரின் தொடக்கத்தில் சில சரிவுகளைச் சந்தித்தாலும், பிறகு தங்கள் திறமையான ஆட்டத்தின் காரணமாக இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்தத் தொடரின் சிறப்பான செயல்பாட்டை கடைசிப் போட்டியில் கொடுப்பதற்காகக் காத்திருந்தோம் போல. முக்கியமான போட்டிகளில் அணியின் முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். சேஸிங்கிற்கு கொஞ்சம் ஏதுவாக சூழல் இருந்தது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அதற்கேற்றவாறு வீரர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள். நாங்கள் கொஞ்சம் வயதான அணியைத்தான் வைத்திருக்கிறோம்.
ஆனால், அனைவரும் தங்கள் திறனை நன்றாக வெளிக்காட்டி சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். 300 ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருந்தால் கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அதுவும் சேஸ் செய்யக்கூடிய டார்கெட்தான். ஆக, 240 ரன்கள் என்பது எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மார்னஸூம் லபுஷேனும் அழுத்தம் ஏற்றிக் கொள்ளமல் சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள். ஹெட்டை அணியில் எடுத்ததே ஒரு ரிஸ்க்கான விஷயம்தான். அவர் கை உடைந்திருந்தது. ஆனாலும் தேர்வாளர்கள் அவரை நம்பி அணியில் எடுத்தார்கள். எடுத்த ரிஸ்க்கிற்கான பலனை அனுபவிக்கிறோம். ஹெட் ஒரு லெஜண்ட்.
எங்களின் பௌலிங்கின் போது பெரும்பாலும் இந்திய ரசிகர்களை அமைதியாக வைத்திருந்தோம். ஒரு சில இடங்களில் அவர்கள் ஆர்ப்பரித்தபோது அது பயங்கரமான ஆர்ப்பரிப்பாக இருந்தது. கிரிக்கெட்டின் மீதான இந்த ரசிகர்களின் ஆர்வம் அற்புதமானது. முடிவு எதுவாக இருந்திருந்தாலும்கூட இந்த அற்புதமான நாளை மறக்கமாட்டோம். நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். அதற்காக காத்திருக்க முடியாது. தைரியமாக துணிச்சலாக ஆட்டத்தில் மோதிப் பார்க்கலாம். முதல் இரண்டு போட்டிகளில் தோற்றபோது அணியினரிடம் இதைத்தான் சொன்னேன். இந்த ஆண்டு எங்களுக்கு ஏகப்பட்ட வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. இந்த ஆண்டை எங்களால் மறக்கவே முடியாது. ” என்றார் பேட் கம்மின்ஸ்