சுவிட்சர்லாந்தில் மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்படுவது வழக்கம். இது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் கிராமத்தினர், மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள்.
இவர்கள் மாடுகளை சுதந்திரமாகப் புல்வெளிகளிலும், மலைகளிலும் விடுகின்றனர். மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் சுற்றித் திரியும் மாடுகளின் நடமாட்டத்தைக் கண்டறிய மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் உதவுகின்றன.
மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டு இருப்பதால் அவை பகலும் இரவும் என பொதுவெளியில் விடப்படுகின்றன.
சில ஆண்டுகளில் 5,000 குடியிருப்பாளர்களைக் கொண்டு `Aarwangen’ கிராமம் வளர்ந்துள்ளது. பயணிகளிடையே இந்த கிராமம் பிரபலமடைந்து வருவதால் இங்குக் குடிபெயர்பவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இங்குக் குடியேறிய இரண்டு பேர் மாடுகளின் மணி சத்தம் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் செய்வதாகக் கிராம சபையில் புகார் அளித்தனர். இந்த செய்தி அந்த கிராமம் முழுவதும் பரவ, மணி கட்டப்படுவதற்கு ஆதரவான இயக்கம் உருவாக்கப்பட்டது.
1,100 நபர்கள், `மாடுகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் கலாச்சாரத்தின் அடையாளம், நாம் எப்படி வாழ விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது’ என ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த புகாரை வாபஸ் பெற வைத்தனர். புகார் அளித்த ஒருவரை ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
இந்த செய்தி வெகுஜன மக்களிடையே கவனம் பெற்ற நிலையில், கிராமத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
“சமீப காலமாக ஊருக்கு வருபவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது குறைவாக உள்ளது. மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் மீதான புகார் குறித்த விவாதம் நகர்ப்புற – கிராம பிரிவினையின் வெளிப்பாடு என்று நான் கருதுகிறேன்’’ என்று மேயர் நிக்லாஸ் லுண்ட்ஸ்கார்ட் ஹான்சென் கூறியுள்ளார்.