பல விருதுகளை தன்வசமாக்கிய பிறகு ‘கூழாங்கல்’ திரைப்படம் கடந்த வாரம் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
ஆணாதிக்கம், கணவரின் மது பழக்கத்தால் சீரழியும் மனைவிகளின் அவலத்தை பற்றியும் நிதர்சன வடிவில் படம் பேசுகிறது. இத்திரைப்படத்திற்கு தொழில் நுட்ப வேலைகளும் கூடுதல் வலு சேர்த்திருக்கின்றன. படத்தில் வசனங்கள் குறைவாக இருந்தாலும் கதபாத்திரங்களின் எமோஷன்களை பார்வையாளர்களுக்குக் கடத்தி கச்சிதமாக தனது பணியை மேற்க் கொண்டிருக்கிறார், சவுண்ட் டிசைனர் ஹரி பிரசாத் . அவரைத் தொடர் கொண்டு பேசினோம். ‘கூழாங்கல்’ திரைப்படத்தைப் பற்றித் தொடங்கிய உரையாடல் தேசிய விருதில் அவர் பங்கு என பல விஷயங்கள் வரை நீண்டது.
பேசத் தொடங்கிய ஹரி பிரசாத், “2004ல நான் சென்னைக்கு வந்தேன். என்னோட கரியர் சரத்குமார் நடிச்ச ‘ஏய்’ படத்துலதான் தொடங்குச்சு. அதுக்கப்புறம் பல படங்கள்ல நான் ஏ.டி.ஆராக வேலைப் பார்த்திருக்கேன். இப்போ, கூழாங்கல் படத்தோட பயணம் வினோத் ராஜ் மூலமாகதான் தொடங்குச்சு. இயக்குநர் வினோத் ராஜ் ‘இந்த படத்துல நல்ல டீம்மாக சேர்ந்து வேலைப் பார்ப்போம்’ன்னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம, ‘லைவ் சவுண்ட் மாதிரி வேலைப் பார்க்கணும்’ன்னு என்கிட்ட சொன்னாரு. எனக்கு ‘கூழாங்கல்’ திரைப்படத்தோட கதையும் ரொம்ப பிடிச்சிருந்தது.” என்றார்.
மேலும் பேசத் தொடங்கிய அவர், ” ‘கூழாங்கல்’ திரைப்படம் என்னோட சவுண்ட் டிசைன் கரியருக்கும் முதற்புள்ளியாக அமைஞ்சிருக்கு. சவுண்ட் டிசைன்ல இதுதான் என் முதல் திரைப்படம். முதல் படத்துலேயே பல சேலஞ்சிங்கான விஷயங்களை முன்னெடுத்து பண்ணியிருக்கேன். இதுக்கெல்லாம் முன்னாடி நான் பல படங்களுக்கு டப்பீங் ஏ.டி.ஆராகவும் வேலை பார்த்திருக்கேன். இந்த படத்துல வேலை பார்த்த பலருக்கும் இது முதல் திரைப்படம். எல்லோரும் ரொம்பவே நல்ல பண்ணியிருந்தாங்க.” என்றவர் தனது சவலான பணிகள் குறித்து பேசத் தொடங்கினார்,” இந்த படத்தோட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் படம்பிடிக்கப்பட்ட அதே நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். நான் சென்னைல வளர்ந்தவன். அந்த நிலப்பரப்போட சவுண்ட்டை கொண்டு வர்றதுக்கு பல முயற்சிகள் எடுத்து இன்னும் நல்லா பண்ணலாம்ன்னு முனைப்போட வேலைப் பார்த்தோம். இந்த படம் முழுமையாகவே சிங்க் சவுண்ட்தான். டப்பிங் தனியாக பண்ணல. சவுண்ட் எபெக்ட்ஸ் மட்டும் ஃபாலில (Foley) ரீ- கிரியேட் பண்ணோம். படத்துல பல சவுண்ட் எபெக்ட்ஸ் தனியாக தெரிஞ்சதுக்கும் இதான் காரணம்.
இதுல ஒவ்வொரு கதாபாத்திரம் நடந்து போகுற சத்தத்தை வச்சே அந்த கதாபாத்திரத்தோட கோபத்தைக் காட்டணும். இது மாதிரியான பல விஷயங்களுகு ரொம்பவே உன்னிப்பாக வேலைகளைப் பண்ணோம். இயக்குநர் வினோத் ராஜும் சவுண்ட் வேலைகளை ரொம்பவே கவனிப்பார். இன்னைக்கு ஒரு சவுண்ட் பார்த்துட்டு ஒகே பண்ணிட்டு போயிடுவார். திரும்ப அடுத்த நாள் ‘அந்த சவுண்ட் இப்படி வேணும, சினிமாடிக்காக சவுண்ட் இல்லாம, லைவ்வா போயிடலாம்’ன்னு சொல்வாரு. இந்த படத்துக்கு சவுண்ட் வேலைகள் முடியுறதுக்கு ரொம்ப நாள் டைம் எடுத்தது. இந்த படத்துக்கு மிக்ஸிங் வேலைகளும் ரொம்ப சேலஞ்சிங்காக அமைஞ்சது. மும்பைக்கு போய் சவுண்ட் வேலைகளெல்லாம் பார்த்தோம். ” என்றார்.
மேலும்,” ‘கூழாங்கல்’ படத்துல வசனங்கள் குறைவுதான். பல எமோஷன்களை முன்னிறுத்துவதற்கு சவுண்ட்தான் முக்கியம். அதுக்கேத்த மாதிரி இந்த படத்துல பல காட்சிகள்ல சவுண்ட் பண்ணியிருப்போம். கூழாங்கல் திரைப்படத்திற்குப் பிறகு 5-க்கும் மேற்பட்ட இன்டிபென்டென்ட் படங்கள்ல வேலை பார்த்துட்டு வர்றேன். அதுல ‘கற்பரா’ன்னு ஒரு படமும் ரோட்டர்டேம் திரைப்பட திருவிழாவுக்கு போச்சு. இதுமட்டுமில்லாம, 76 நிமிடங்களுக்கு ஒரு சிங்கிள் ஷாட் படத்தை சிங்க் சவுண்டல வேலைப் பார்த்திருக்கேன். இது எனக்கு மிகவும் சேலஞ்சிங்கான அனுபவமாக இருந்தது. இந்த சிங்கள் ஷாட் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவுல வெளிவரும்.முன்னாடிலாம் இன்டிபென்டென்ட் படங்களுக்கு சரியான பட்ஜெட் கிடைக்காது. ‘கூழாங்கல்’ திரைப்படத்திற்குப் பிறகு இன்டிபென்டென்ட் திரைப்படங்கள் நிச்சயம் அதிகளவுல வரும்.
இப்போ நான் ‘பெபெல்ஸ் ஸ்டுடியோ (pebbles studio) வச்சிருக்கேன். இன்டிபென்டென்ட் படங்கள் தயாரிச்சு அதுக்கு சரியான மேடை அமைச்சு தரனும்ன்னு இந்த ஸ்டுடியோவை தொடங்குனேன். ஏற்கெனவே நான் சொன்ன ‘கற்பரா’ திரைப்படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர். ” என்றவர் ” ‘கூழாங்கல்’ திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்படத் திருவிழாவுக்கு போகுறதுக்கு முன்னாடி மணி ரத்னம் சார் சவுண்ட்ஸ் நல்லா இருக்குன்னு பாராட்டியிருக்கார். எனக்கு மெசேஜ் காமிச்சாங்க. மேலும், பல ஆர்டிக்கிள்ஸ்ல சவுண்ட்ஸ் ரொம்பவே எதார்த்தமாக இருக்குன்னு எழுதுறாங்க. இதுக்காகதான் இவ்ளோ காலம் போராடுனதே !. இப்போ இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.” என்றவர் 69வது தேசிய விருதுகளில் Non- Feature Film பிரிவின் நடுவர் குழுவில் இருந்திருக்கிறார்.
அது குறித்து அவர்,” இதுமட்டுமில்லாம, 69வது தேசிய விருதுகள்ல Non- Feature Film பிரிவுல என்னையும் ஜுரியா கூப்பிட்டிருந்தாங்க. அந்த குழுவில இருந்த 7 பேர்ல நானும் இருந்தேன். நானும் வசந்த் சாரும்தான் தமிழ்நாட்டுல இருந்து போயிருந்தோம். சவுண்ட் துறையில வேலை பார்த்துட்டே ‘கற்பரா’ இண்டிபெண்டன்ட் திரைப்படத்தை தயாரிச்சதை அடையாளப்படுத்தி என்னைய கூப்பிட்டாங்க. எப்பவும் இந்த குழுவுல ஒரு தொழில் நுட்ப கலைஞரை கூப்பிடுவாங்க. இந்த வருஷம் என்னை அழைச்சிருந்ததுல ரொம்பவே மகிழ்ச்சி .” எனப் பெருமையுடன் கூறினார் ஹரி பிரசாத்.