கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் தெருக்களில் பிச்சை எடுத்துவந்த குருசித்தப்பா என்ற முதியவரிடம் அதிக பணம் இருந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் அவரை பரிசோதித்ததில் 60,000 ரூபாய் பணமும், அவர் வைத்திருந்த பையில் நிறைய நாணயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவற்றைப் பறிமுதல் செய்த நிலையில் அவரை கிரிமினல் என நினைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
அவர் மடபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்தினருடன் சண்டையிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, அதன்பின் பிச்சைக்காரனாக வாழ்ந்து வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. தான் பிச்சை எடுத்த பணத்தில் தான் அந்த 60,000 ரூபாயைச் சேர்த்திருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
இவருக்கு மனைவி மற்றும் மகன் இருப்பது போலீசாருக்கு தெரியவரவே அவரின் குடும்பத்தினரை அழைத்து குருசித்தப்பா இருக்கும் இடத்தைக் குறித்து தகவல் கூறியுள்ளனர். 8 வருட பிரிவுக்குப் பின்னர் மீண்டும் தனது குடும்பத்தோடு இவர் இணைந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.