ஆசியப் போட்டிகள் சீனாவில் வருகிற 23 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஆனால், அதற்கு 4 நாட்களுக்கு முன்பாகவே கால்பந்து போட்டிகள் தொடங்கிவிடுகிறது.
ஆனால், அதற்கான இந்திய அணி இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை.ஆசியப் போட்டிக்கான 22 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த 22 வீரர்களில் 13 வீரர்கள் சீனாவுக்கு பயணம் செய்து ஆசியப்போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் இருந்தது.
ஏனெனில், இந்தியாவில் ஐ.பி.எல் போல கால்பந்துக்கு நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் தொடர் வருகிற 21 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. க்ளப் அணிகளில் முக்கிய இடம்பிடித்திருக்கும் வீரர்களை ஆசியப் போட்டிகளுக்கு அனுப்ப க்ளப் அணிகள் விரும்பவில்லை.
இந்திய அணியின் கேப்டனான சுனில் சேத்ரி பெங்களூர் அணிக்காக ஆடி வந்தார். சுனில் சேத்ரி கேட்டுக்கொண்டதன் பெயரில் அவரை ஆசியப்போட்டிகளில் ஆட பெங்களூர் அணி அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், மற்ற அணிகள் மற்ற வீரர்களுக்கு அனுமதியளிக்க விரும்பவில்லை. இதனால், போட்டிகள் தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக 18 பேர் கொண்ட புதிய அணி ஆசியப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியில் சுனில் சேத்ரி மட்டுமே அனுபவமிக்க வீரராக இருக்கிறார். மேலும், இந்த அணியில் இருக்கும் வீரர்கள் யாரும் இதற்கு முன் ஒரு பயிற்சி முகாமில் கூட ஒன்றாக ஆடியதில்லை.
‘நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. யார் மீதும் பழி போட விரும்பவில்லை. அதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்வோம். என்னுடைய க்ளப்பிற்கு நான் தேவைப்படுகிறேன்.
என்னுடைய க்ளப் பயிற்சியாளர் சைமன் க்ரேசனுக்கு நான் செல்வதில் உடன்பாடில்லை. ஆனால், என்னால் இந்திய அணியிலிருந்து அழைப்பு வரும்போது என்னால் அதற்கு மறுப்பு சொல்ல முடியாது.’ என்றிருக்கிறார் சுனில் சேத்ரி.
மேலும், அனுபவம் இல்லாத பயிற்சி முகாமில் கூட ஒன்றாக ஆடாத அணியை வைத்துக் கொண்டு ஆசியப் போட்டியில் களமிறங்குவது பெரும் சவால்மிக்கதுதான் எனவும் சுனில் சேத்ரி கூறியிருக்கிறார்.