ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி வருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் விராட் கோலியை டென்னிஸ் வீரரான ஜோக்கோவிச்சுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த சதம், ஓடிஐ கரியரில் அவர் அடித்த 47 வது சதமாகும். ஓடிஐ போட்டிகளில் அதிக சதம் அடித்திருக்கும் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். அவர் ஓடிஐ போட்டிகளில் மட்டும் 49 சதங்களை அடித்திருந்தார். சச்சினின் இந்த சாதனையை வேறு யாராலும் முறியடிக்க முடியாது என்றே பலராலும் நம்பப்பட்டது. ஆனால், இப்போதே விராட் கோலி 47 சதங்களை எட்டிவிட்டார். இன்னும் 3 சதங்களை அடித்தால் சச்சினை முறியடித்து ஓடிஐ போட்டிகளின் வரலாற்றிலேயே அதிக சதங்கள் அடித்த வீரதர் எனும் சாதனையைப் படைப்பார். ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி, ஆஸ்திரேலிய தொடர், உலகக்கோப்பை என அடுத்தடுத்து பல ஒருநாள் போட்டிகளில் கோலி ஆடவிருப்பதால் இன்னும் 2 மாதங்களிலேயே அவர் இந்த வரலாற்று சாதனையை படைக்க முடியும்.
இதை மனதில் வைத்துதான் தினேஷ் கார்த்திக் விராட் கோலியை ஜோக்கோவிச்சுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, ‘கோலியின் கரியரை ஜோக்கோவிச்சின் கரியரோடு ஒப்பிடலாம். ஜோக்கோவிச் அவரது கரியரை தொடங்கிய போது நடாலும் ஃபெடரரும் டென்னிஸில் அதுவரை யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியிருந்தார்கள். ஆனால், ஜோக்கோவிச் அறிமுகமானார். அவர்களைவிட அதிகமாகச் சாதித்தார்.
அதேமாதிரிதான் கோலியும், அவர் அறிமுகமாகி ஆட்டத்தின் போக்கையே மாற்றி பல சாதனைகளையும் முறியடித்திருக்கிறார். அவருக்குத் தலைவணங்குகிறேன்!’ என தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.