ரயில்வே வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரி மற்றும் தலைவராக ஜெயவர்மா சின்ஹா பொறுப்பேற்றுள்ளார். 105 ஆண்டுக்கால ரயில்வே வரலாற்றில், இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெயவர்மா.
ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்து வந்த அனில் குமார் லஹோட்டியின் பதவிக்காலம், ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அவரது பணியிடத்திற்கு ஜெயவர்மா சின்ஹாவை அரசு நியமித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவானது (ACC) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதன்படி செப்.1 அன்று இப்பொறுப்பினை ஏற்றுள்ளார் ஜெயவர்மா சின்ஹா. 105 ஆண்டுக்கால ரயில்வே வரலாற்றில், இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜெயவர்மா. அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சின்ஹா, 1986-ல் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் (IRTS) இணைந்தார்.
வடக்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில், நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின்போது, சிக்கலான ரயில்வே சிக்னல் அமைப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கியதன் மூலம் ரயில்வேயின் பொது முகமாகி பலரின் கவனத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.