தெலங்கானாவில் காங்கிரஸுடனும் பா.ஜ.க-வுடனும் மல்லுக்கட்டிவரும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு இன்னொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஷர்மிளா, ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும் ஆவார்.

ஜெகன்மோகன் ரெட்டி

தந்தையின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸில் சிறிது காலம் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்துவிட்டார். அவரின் சகோதரியான ஷர்மிளா, தெலங்கானாவில் அதிகாரத்துக்கு வர வேண்டுமென்ற நோக்கத்துடன் தனிக்கட்சி ஆரம்பித்து இயங்கிவருகிறார்.

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் அவர் இணைக்கப்போகிறார் என்ற பேச்சு சமீபத்தில் எழுந்தது. அந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் டெல்லியில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஷர்மிளா. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன் நீண்ட நேரம் அவர் பேசியிருக்கிறார்.

ஒய்.எஸ்.ஷர்மிளா

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை ஆரம்பித்ததில் இருந்து தெலங்கானா மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளில் பணியாற்றிவருகிறேன். தற்போது, தெலங்கானா அரசியல் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க டெல்லிக்கு வந்தேன்” என்றார்.

மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் தெலங்கானாவில் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா நிர்வாகிகள் பலரின் நீண்டநாள் விருப்பம். ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸில் சேர்த்துவிட்டால், அதன் மூலம் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களை காங்கிரஸுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. அதற்கான காலம் தற்போது கனிந்திருப்பதாக அந்த நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

தாயுடன் ஜெகன்மோகன் ரெட்டி

ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு என்று இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள். அதாவது, ‘காங்கிரஸ் கட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி இருந்தபோது, அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் கோபமாக இருந்தனர். ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் சேர்ந்தால், அவருக்குப் பின்னால் போவதற்கான வாய்ப்பு குறைவு’ என்கிறது அந்தத் தரப்பு.

ஒய்.எஸ்.ஷர்மிளா இணைவதால், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும். முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சிக்கு கூடுதல் போட்டியை காங்கிரஸ் கொடுக்கும் என்று தெலங்கானாவைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதை மறுக்கும் பி.ஆர்.எஸ் கட்சியினர், ‘தெலங்கானா வாக்காளர்கள் இந்த முறை சென்டிமென்ட் எல்லாம் பார்க்க மாட்டார்கள்’ என்கிறார்கள்.

கே.சந்திரசேகர ராவ்

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைப்பயணம் சென்றதைப்போல, தெலுங்கானாவில் 3,800 கி.மீ தூரம் ஷர்மிளா நடைப்பயணம் சென்றார். அதன் மூலம் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் அவர் இடம்பிடித்தார். அந்த நடைப்பயணத்தின் மூலம் தெலங்கானாவில் ஷர்மிளாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

நடைப்பயணத்தின்போது முதல்வர் சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்தார். அதனால், அவர் நடைப்பயணம் செல்ல போலீஸார் அனுமதி மறுத்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. இந்த நேரத்தில், காங்கிரஸில் ஷர்மிளா இணைந்தால், அல்லது அவருடைய கட்சியை காங்கிரஸிஸுடன் இணைத்தால், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பெரும் சவாலை கொடுப்பவராக ஷர்மிளா உருவெடுப்பார், சந்திரசேகர ராவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்கிறார்கள் தெலங்கானாவைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.